கூ! கூ! திருடன்! திருடன்!
295
முன்னிலும் அதிக உருக்கமாக, “அக்காள் சொல்வதை யெல்லாம் சொல்லிக் கொள்ளட்டும். நீங்கள் பதிலே பேசவேண்டாம். இந்தச் சாமாவையருக்கும், புது சம்பந்தி முதலியோருக்கும் இனிமேல் இங்கே என்ன வேலை இருக்கிறது? போகச் சொல்லுங்கள். எல்லாவற்றையும் நாம் அப்புறம் கேட்டுக் கொள்ளலாம்” என்று கூறி இரகசியமாக நயந்து வேண்டினாள். அப்போது திகைப்படைந்து நடுநடுங்கி ஒரு பக்கத்தில் நின்ற சாமாவையரை வராகசாமி பார்த்து, “அடே சாமா! இதுவரையில் உன்னை நான் மிகவும் யோக்கியனென்று நினைத்தேன். நீ செய்ததெல்லாம் வெளியாய்விட்டது. உன்னுடைய முகத்தைப் பார்க்கவும் கூசுகிறது. என் முன்னால் நிற்காதே, போய்விடு; இனிமேல் நீ எங்களுடைய வீட்டில் அடி வைக்கக்கூடாது. உன்னுடைய சிநேகிதர்களான சம்பந்தி களையும் அழைத்துக் கொண்டுபோ; நீங்கள் எனக்குக் கலியாணம் செய்து வைத்தது போதும்; நட வெளியில்” என்று கண்டிப்பாகவும் மிகுந்த அருவருப்போடும் கூறினான். அதைக் கேட்ட வரதாச்சாரியாரும் அவரது பந்துக்களும் வெட்கிக் கீழே குனிந்து கொண்டனர்; சாமாவையரோ சகிக்க இயலாத அவமானம் அடைந்தார். எனினும், ஏதோ விஷயத்தைச் சொல்லுவதற்காக தமது வாயைத் திறந்து கனைத்துக் கொண்டார். சாமாவையரையும் சம்பந்திகளையும் வெளியிற் போகும்படி வராகசாமி சொன்னதைக் கேட்ட பெருந்தேவியம்மாளது கோபம் முன்னிலும் பெருகியது.
அவள் சாமாவையரைப் பார்த்து அழுத்தமாக, “அடே சாமா! நீ போக வேண்டாம்; சம்பந்திகளும் போகவேண்டாம். என்னுடைய பங்களாவிலிருக்கும் உங்களை வெளியிலே போகச்சொல்ல யாருக்கு அதிகாரம் இருக்கிறது? வராகசாமிக் கென்ன தெரியும்? இந்த தேவடியாள் சிறுக்கியின் சொக்குப் பொடியில் மயங்கி இவன் இப்படி உளறுகிறான். இவன்