பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

வனதேவியின் மைந்தர்கள்


குதிரைகளின் குளம்படி ஓசை மட்டுமே ஒலிக்கிறது. குலுக்கல். உடல், உள்ளம். தனக்குள் இருக்கும் உயிர்... அதற்கும் அதிர்ச்சி ஏற்படுமோ? தன் மலர்க் கரத்தால் வயிற்றைப் பற்றிக்கொள்கிறாள்... உயிர்த்துடிப்புகள் மவுனமாகி விட்டனவோ?... இல்லை... இது, ஒரு விளையாட்டாகவும் இருக்கலாம். மன்னர் கோமதி நதிக்கரையில் காத்திருப்பார். முனி மக்களுக்குரிய பரிசிற் பொருட்களைச் சுமந்து முன்னமே தேர்கள் சென்றி ருக்கலாம். அவளை எதற்காக அவர் இந்நிலையில் சோதிக்க வேண்டும்?... ஒரு கால் ஊர்மியின் விளையாட்டோ? ஊர்மியும் வருகிறாளோ? சதானந்தர் வந்திருந்தாரோ? ஊர்மியை அழைத்துச் செல்லப்போகிறாரா? எபீமந்த முகூர்த்தம் என்றார்கள்?...

ஊர்மிளையின் நினைவு வந்ததும் சிறிது ஆறுதலாக இருக்கிறது. இருக்கட்டும் இருக்கட்டும், இந்தப் போக்கிரிதான் இதற்கெல்லாம் காரணமா?... ஆனால் இந்தச் சுமந்திரர் அன்று எங்களை நாடு கடத்த தேரோட்டி வந்தாற்போல் எதற்கு வருகிறார்? பெண்கள் விஷயத்தில் இவர் எதற்கு மூக்கை நுழைக்க வேண்டும்?. சுமந்திரர். முப்பாட்டன் காலத்து மந்திரி பிடரியில் நரை தெரிய சாயம் மங்கிய பாகை... செவிகளில் குண்டலங்கள் இல்லை; முதுமையே செவிகளை இழிந்து தொங்கச் செய்துவிட்டது. மலையே அசைந்தாலும் பேச்சு வராது... பெரிய மன்னருக்கு சக்கரவர்த்திக்கு - இப்போதைய மன்னருக்கு - இவர் மகனுக்கு இருப்பாரோ? மெய்க்காப்பாளர், அமைச்சர், ஆலோசகர், தேர்ப்பாகன்...

அப்போது ஊரே இவர்கள் பின் அமுது கொண்டு வந்தது. ஆற்றின் கரையில் மக்கள் உறங்கச் சென்ற நேரம் பார்த்து, இரவுக்கிரவே இவர்களை ஆறு கடக்க ஏற்பாடு செய்தார். அப்போது அதெல்லாம் விளையாட்டுப் போல் உற்சாகமாக இருந்தது...

ஆற்றங்கரை தெரிகிறது.

ஊர்மியோ, மன்னரோ, எங்கு இருப்பார்கள்?