விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
107
தளராமல், தமது இலட்சியத்தை நிறைவேற்றியே தீருவது என்ற திட்டத்துடன் அவர் செயல்பட்டு வந்தார்.
அவருக்கு ஆதரவாக, திருவாங்கூர் மன்னரும், எட்டையாபுரம், சிவகிரி ஆகிய திருநெல்வேலிப் பாளையக்காரர்களும் இருந்துவந்தனர். அந்த நாட்டுப் போர்வீரர்கள் இராமநாதபுரம் பேட்டையில் நிலைகொண்டிருந்ததை ஏற்கெனவே கலெக்டர், மெக்லாய்டு, சென்னை கவர்னருக்குத் தெரிவித்திருந்தார்.[1] அதே போன்று, இராமநாதபுரத்திற்கு அண்மையிலிருந்த திருப்புல்லாணி, பரமக்குடி, பள்ளிமடம் கோட்டைகளில் மறவர் அணிகள் பலப்படுத்தப்பட்டு வந்ததை, தளபதி மார்ட்டின்சின் அறிக்கையும் தெரிவித்தது.[2] மேலும் இராமநாதபுரத்தில் புதிதாக குதிரைப்படை அணி ஒன்றும் துவக்கப்பட்டு இருந்தன.[3]
சேதுபதி மன்னர் திடீரென கும்பெனிப் படையினால் குழப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டதால், அவரது இராணுவத் திட்டத்தை எளிதில் தகர்த்து விட முடிந்தது. மேலும். தங்களுக்கு மரண பூமியாக விளங்க வேண்டிய மறவர் பூமியை தான பூமியாக நவாப்பிடமிருந்து பெற்றனர். இராணுவ நடவடிக்கைகளுக்கென தனியாக அரண்மனையில் சேதுபதி அரசர் சேமித்து வைத்திருந்த பெருந்தொகையை புதையல் எனக்கூறி கைப்பற்றி விட்டனர். அத்துடன் வங்காளத்துடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பினால், மன்னருக்கு அங்குள்ள சொத்துக்களையும் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். மறவர் சீமைக்கு தென்மேற்கே உள்ள கயத்தாரில் இருந்து பரங்கியரது அணி வடகிழக்காக முன்னேறி இராமநாதபுரம் கோட்டையைக் கைப்பற்றியதால், தெற்கே திருப்புல்லாணியிலும், மேற்கே பரமக் குடியிலும், நிலைகொண்டிருந்த படை அணிகளுடன் தொடர்பு இல்லாது செயல் இழந்து விட்டன.
இதற்கெல்லாம் மேலாக சேதுபதி மன்னர் தமது ரகசிய திட்டத்தின் ஒரு பகுதியாக கீழைக்காட்டில் நிறுவியிருந்த பீரங்கி