விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
125
பலரை கள பலியாகக் கொடுத்துவிட்டு கிளர்ச்சிக்காரர்கள் வட திசையில் நழுவினர். அவர்களைப் பின் தொடர்ந்த சுபேதார் ஷேக் மீரானும், அவனது அணியும் கிளர்ச்சிக்காரர்களை வீர சோழன், அபிராமம் ஆகிய பகுதிகளில் இருந்து விரட்டி இராமனாதபுரத்தின் தெற்குப் பகுதிக்கு பின்னடையுமாறு நிர்ப்பந்தம் செய்தனர்.[1] மயிலப்பனும் அவரைச் சூழ்ந்து நின்ற நானுறுக்கும் அதிகமான மறவர்களும் கீழ்க்குளம் காட்டிற்குள் நுழைந்தனர்.[2]
அதே சமயத்தில் இராமனாதபுரத்திலிருந்து கலெக்டர் லூவிங்டன், சிவகங்கை சேர்வைக்காரர்களிடமிருந்து பெற்ற கூலிப்படையின் பாதுகாப்பில் கமுதி கோட்டைக்கு வந்து சேர்ந்தார்.[3] பெரும்பாலும் அவர் மானாமதுரையிலிருந்து திருச்சுழி வழியாக கமுதிக்கு வந்து இருக்க வேண்டும். கிளர்ச்சியினால் ஏற்பட்டுள்ள அழிமானம் மிகவும் பரந்த அளவில் இருப்பதாக லூவிங்டன் அறிக்கையொன்றில் தெரிவித்து உள்ளார்.[4] கிளர்ச்சியை ஒடுக்கும் பணியில் அவர் தீவிரமாக முனைந்தார். இப்பொழுது அவர் கையாண்ட தந்திரம் இராமனாதபுரம் சீமை மறவர்களது எழுச்சியை அடக்க சிவகங்கை சிமை சேர்வைக்காரர்களது படையை பயன்படுத்துவது, நமது கைவிரலை எடுத்து நமது கண்ணைக் குத்துவது அவரது திட்டம்.
கீழ்க்குளம் காட்டில் சண்டை தொடர்ந்தது. கிளர்ச்சிக்காரர்கள் வீரப் போரிட்டு முப்பது மறவர்களை இழந்தன. ஐம்பது பேருக்கு படுகாயம், நாற்பத்தின்மர் சிறைபிடிக்கபட்டனர்; எஞ்சியவர்கள் வெள்ளக்குளம் சென்றனர். கும்பெனிப் படையினருடன் இங்கு சிவகங்கையாரது அணியில் சேர்ந்து