பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதவு திறந்தது!

131

எத்தனையோ ஒட்டுத் திண்ணைகள் அவனை “வா வா!” என்று அழைப்பது போலிருந்தன; ஆனால் வாசற் கதவுகள் வழி மறித்து நின்றன.

அங்குமிங்குமாக அலைந்து அலுத்துப்போன பிறகு; அருகிலிருந்த ஒரு வீட்டின் கதவைப் பலமாகத் தட்டினான் அவன்.

அந்த வீட்டுக்காரர்தான் டாக்டர் ரங்கராவ். “யாரப்பா, அது?” என்று சாவதானமாகக் கேட்டார் அவர்.

“நான்தான் குப்புசாமிங்க!”

டாக்டருக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. “என்னடா, உன்னையும் ஆட்லி, ட்ரூமன் மாதிரி உலகமே அறிந்திருக்குமென்று நினைத்துக் கொண்டாயா?” என்று கேட்டார் படுக்கையில் கிடந்தபடியே.

“நான் ஏன் சாமி, அப்படியெல்லாம் நினைச்சிக்கிறேன்? வெளியே காத்தும் மழையும் கலந்தடிக்குது; உங்க வீட்டுத் திண்ணையிலே கொஞ்சம் இடம் கொடுத்தீங்கன்னா, இராப்பொழுதைக் கழிச்சுடுவேன்” என்றான் குப்புசாமி.

இப்பொழுதுதான் டாக்டருக்கு விஷயம் விளங்கிற்று. உடனே அவர், “என்னடா, இது சத்திரமா?” என்று உறுமினார்.

“நிஜத்தைச் சொல்லப் போனா சத்திரந்தானே, சாமி இருக்கிற வரைதானே இந்த வீடு வாசல் எல்லாம்....” என்று தனக்குத் தெரிந்த வேதாந்தத்தை அவருக்குப் போதிக்க ஆரம்பித்தான் குப்புசாமி.

அவ்வளவுதான்; அடுத்த நிமிஷம் சாத்தியிருந்த கதவு ‘தடா’ரென்று திறந்தது. வராந்தாவிலிருந்த மின்சார விளக்கு ‘குப்‘பென்று எரிந்தது. பசியால் வாடி, மழையால் நனைந்து, குளிரால் நடுங்கி நின்ற குப்புசாமியின் தோற்றம்கூட ஏனோ டாக்டர் ரங்கராவின் ஆத்திரத்தை அடக்கவில்லை. “அவ்வளவு திமிரா, உனக்கு?” என்று சீறிக்கொண்டே அவர் வாயு வேகத்தில் அவனுடைய கழுத்தில் கையை வைத்தார்; அடுத்த கணம் கொட்டும் மழையில் அவன் குப்புற விழுந்தான்.

அதற்குப் பின் கதவைப் ‘படா’ரென்று சாத்திய சத்தமும், விளக்கை ‘டக்‘கென்று அணைத்த ஓசையும் கேட்கும் வரைதான் அவனுடைய உடம்பில் உயிர் இருந்தது.

***