பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

வேண்டும் விடுதலை

“கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது’

என்னும் திருவள்ளுவப் பெருமானின் திருவாய் மொழியை நன்கு படித்திருப்பீர்கள். ஆனால் உணர்ந்திருக்க மாட்டீர்கள்; உணர்ந்திருந்தாலும் அதை வாழ்க்கையிலும் கடைப்பிடித்து உணர்த்தியிருக்க மாட்டீர்கள்! ஆட்சிச் செருக்கும் அறிவு அகம்பாவமும் உள்ள உங்களிடம் படைச் செருக்கும், வினைத் தூய்மையும் இருத்தல் அரிதினும் அரிது.

திருவள்ளுவர் பெருமானின் கருத்தை ஊரெல்லாம் முழக்குவீர்கள். அவர் திருவுருவச் சிலையையும் நாட்டுவீர்கள்! ஆனால் அவர் என்ன சொன்னார், எதற்குச் சொன்னார், ஏன் சொன்னார், எப்படிச் சொன்னார், எவருக்காகச் சொன்னார் என்கின்ற மெய்ப்பொருளை நீங்கள் அறிந்திருப்பதாக இதுவரை எங்கும் எப்பொழுதும் எதன் பொருட்டும் நீங்கள் காட்டவில்லை. உங்களிடம் உள்ள போலித்தனமான அறிவும், புரையோடிய உள்ளமும், புல்லிய செயல்களுமே உங்களை அவற்றினின்று வேறு பிரித்து வைத்திருக்கின்றன. உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொடுக்கவும் உங்களை நீங்களை மெச்சித்துக் கொள்ளவுந்தாம் நீங்கள் அறிவீர்கள். எனவே எந்த வாய்ப்பையும் நீங்கள் உங்களுக்காகத்தான் பயன்படுத்துவீர்களே தவிர, இம்மொழிக்காகவும், இனத்திற்காகவும், நாட்டிற்காகவும் பயன்படுத்த மாட்டீர்கள்.

இவ்வாறு நீங்கள் என்றுமே சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள், ஏனெனில் பிறர்க்கு உடலில் மட்டுந்தான் கொழுப்புப்படரும். ஆனால், கலைஞரே, உங்களுக்கு நீங்கள் மூச்சுயிர்க்கும் நெஞ்சாங் குலையிலும் கொழுப்பு! நீங்கள் பார்க்கின்ற கண்களிலும் கொழுப்பு! நீங்கள் சிந்திக்கின்ற மூளையிலும் கொழுப்பு படர்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் கிடைத்த வாய்ப்பு களையெல்லாம் பறிகொடுத்து விட்டீர்கள்! இனி உங்கட்கு வெறும் வாய்ப்பூ தான்! இது நிற்க.

எனவே, தமிழர்களே! இனி எந்த அரசியல் கட்சியையோ, அரசியல் தலைமையையோ நம்ப வேண்டா. இனிமேலாகிலும் இந்திய அரசியலிலிருந்து பிரிந்து தனித்தமிழ்நாடு பெறுவதே நம் குறிக்கோளாக, முழு முயற்சியாக, இருத்தல் வேண்டும்.