யூரிஸ்தியஸ் ஹெர்க்குலிஸ்க்கு விதித்த மூன்றாவது பணி பேரழகுள்ள ஒரு கலைமானை உயிருடன் கொண்டு வர வேண்டும் என்பது. அந்த மான் ஆர்க்கேடிய நாட்டுக்கப்பால், மரங்கள் அடர்ந்த ஒரு குன்றின் அடிவாரத்திலிருந்த ஈனோ என்ற கிராமத்தின் அருகில் வனத்திலே வாழ்ந்துகொண்டிருந்தது. அதன்
கொம்புகள் பொன்மயமானவை. அதனால் கதிரோளியிலும் நிலவொளியிலும் அவை மின்னிப் பிரகாசித்துக்கொண்டிருந்தன. அதன் கால்களின் குளம்புகள் பித்தளையினால் ஆனவை. அதன் நிறம் பனிக்கட்டி போன்ற வெண்மை. ஆகவே அதன் அழகு சொல்லும் தரமன்று. கண்டவர் அனைவரும் அதை விட்டுப் பிரிய மனமில்லாமல் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். ஆனால், அது மனிதர்களுடைய கண்களுக்கு எளிதில் புலப்படுவதில்லை.
அந்த மானைப் பிடிப்பது எவருக்கும் இயலாத காரியம். முதலில் அதைத் தொடர்ந்து ஓட முடியாது. துள்ளி ஒடுவதிலும், புதர்களுக்குள் மறைவதிலும் மலைகளில் ஏறுவதிலும், கடலில் நீந்துவதிலும் அது வல்லமை பெற்றிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக ஆர்ட்டிமிஸ் என்ற தேவதையின் உடமையாகவும் இருந்தது. அதற்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அவள் அதற்குக் காரணமானவரைச் சபித்து அழித்துவிடுவாள். ஆர்ட்டிமிஸ் சந்திரனின் ஒளிக்கு அதிதேவதையானவள். அவள்
அந்த மானிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தாள்.
பொற்கொம்புகளும் பித்தளைக் குளம்புகளும் கொண்ட அந்த அற்புத மானைத் தேடி ஹெர்க்குலிஸ் ஈனோ வனத்திற்குச் சென்றான். அங்கே ஆர்ட்டிமிஸ் தேவியின் ஆலயம் ஒன்றிருந்தது. அந்த ஆலயத்தைச் சுற்றியே மான் அலைந்துகொண்டிருக்கும் என்று