பல்லவர் வரலாறு/1. பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்

விக்கிமூலம் இலிருந்து
பல்லவர் வரலாறு


1. பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்

தமிழகம்

தமிழகம் பண்டுதொட்டே சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்னும் முப்பிரிவுகளாக இருந்துவந்தது. இம் மூன்று நாடுகளையும் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூன்று மரபரசர் நெடுங்காலமாக ஆண்டு வந்தனர். இவர் அனைவரையும் ‘தமிழை வளர்த்தவர்’, எனக் கூறுதல் பொருந்து மாயினும், பெரிய சங்கங்களை வைத்துத் தமிழைப் போற்றி நூல்களைப் பெருக்கி வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரியதாயிற்று. பாண்டியர் நடத்திய சங்கங்களில் இறுதியாயது ‘கடைச் சங்கம்’ எனப்பட்டது. அது கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை நடந்ததாகும் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. அச்சங்கத்தில் தோன்றியனவாகக் கருதப்படும் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு முதலிய நூல்களை நன்கு ஆராயின், அக் காலத் தமிழகம்-பல்லவர் ஆட்சிதோன்றிய கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதமிழகம் இன்னவாறு இருந்தது என்பதை ஒருவாறு அறியலாம்.

பாண்டிய நாடு

பாண்டிய நாடு என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிக் கோட்டங்களும், கீழ்க்கோடிக் கரையும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் கோநகரம் மதுரை, காயல், கொற்கை என்பன இதன் துறைமுகங்கள். கொற்கை முத்து எடுப்பதற்குப் பெயர் பெற்றது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்தன் அமைச்சனாக இருந்த சாணக்கியன் தனது பொருள் நூலில் கொற்கையைக் குறிப்பிட்டுள்ளான். கடைச் சங்க காலப் பாண்டியருள் சிறந்தவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், சிலப்பதிகாரத்து ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவரே ஆவர்.

பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம் (கி.மு. 60 - கி.பி.200)


சோழ நாடு

சோழ நாடு என்பது தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளிக் கோட்டங்களும், கீழ்க் கடற்கரை வெளியும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இந்த நாட்டைச் சோழர் என்பவர் நெடுங்காலமாக ஆண்டு வந்தார். இவர் தலைநகரம் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்பன. கி.மு. முதல் இரண்டு நூற்றாண்டுகளிலும் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளிலும் காவிரிப் பூம்பட்டினம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது என்பதற்குச் சான்றுகள் பல உண்டு. இந் நாட்டிலிருந்து பலவகைப் பொருள்கள் அயல் நாடுகட்கு அனுப்பப்பட்டன. கரிகாற் சோழன் காலத்தில் இத் துறைமுகம் உயர்ந்த நிலையில் இருந்தது. அயல்நாட்டு வாணிபர் புகார் நகரிற் குடியேறி இருந்தனர். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்கள் இயற்றப்பட்ட கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இப் பெருநகரம் சிறந்த வாணிபத்தலமாக விளக்கம் பெற்று இருந்தது. கடைச்சங்ககாலச் சோழ மன்னருள் பீடுமிக்கவன் கரிகாலனே ஆவன். சோழவனநாடு உணவு வகையிற் சிறப்புற்று இருந்தமையின், சோழ வளநாடு சோறுடைத்து, என்று புகழப்பட்டது.

சேர நாடு

சேர நாடு என்பது கொச்சி, திருவாங்கூர் நாடுகளும் மேல் கடற்கரை வெளியும் மலையாளக் கோட்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் தலைநகரம் வஞ்சிமாநகரம் என்பது முசிறி. தொண்டி என்பன சிறந்த துறைமுகப் பட்டினங்கள். இந்நாட்டிலிருந்து மிளகு, யானைமருப்பு, தேக்கு, அகில், சந்தனம் முதலிய மரங்கள் வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த நாட்டை ‘வானவர்’ எனப்பட்ட சேரர் நெடுங்காலமாக ஆண்டு வந்தனர். அவருட் சிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவன். அவன் மகனான செங்குட்டுவனே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் பெயர் பெற்றபேரரசனாகத் தமிழகத்தில் இருந்தவன்.

தொண்டை மண்டலம்

ஆதொண்ட சக்கரவர்த்தி: இனி, நம் பல்லவர் தொடர்பான தொண்டை நாட்டைப் பற்றிய செய்திகளைக் காண்போம். “நெடுங்காலத்திற்கு முன்தொண்டைநாடு ‘குறும்பர் நிலம்’, என்று பெயர் பெற்றிருந்தது. குறும்பர் தம் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு அங்குக் காலம் கழித்தனர்; அவர்களே தங்கள் நாட்டை 24 கோட்டங்களாக வகுத்தனர்; காவிரிப் பூம்பட்டினத்து வணிகருடன் கடல் வாணிபம் நடத்தினர். பிற்காலத்தில் ஆதொண்ட சக்கரவர்த்தி என்பவன் இக் குறும்பரை வென்று குறும்பர் நாட்டைக் கவர்ந்து, அதற்குத் தொண்டை மண்டலம் எனப் பெயரிட்டனன்”, என்று செவிவழிச் செய்தி கூறுகின்றது.[1]

கரிகாலன்: ஆனால், தமிழ்நூல்கள், கரிகாற்சோழன் அந்நாட்டைக் கைப்பற்றினான் என்றும், பின்னர்த் தொண்டைக்கொடியால் சுற்றப்பட்டுக் கடல் வழி வந்த நாகர் மகள் மகனான இளந்திரையன் ஆண்டதால் ‘தொண்டை மண்டலம்,’ எனப் பெயர்பெற்றது என்றும் கூறுகின்றன. இரண்டாம் குலோத்துங்கச் சோழனிடம் உயர் அலுவலாளராக இருந்த தொண்டைமண்டல அறிஞரான சேக்கிழார் பெருமான், வல்லார்வாய்க் கேட்டணர்ந்த செய்தி ஒன்றைக் கூறியுள்ளார். அஃதாவது: ‘கரிகாலன் இமயம் செல்லும் பொழுது வேடன் ஒருவன் எதிர்ப்பட்டுக்காஞ்சிநகரத்தின் வளமையைக் கூற, அப் பேரரசன் அந்நகரத்தைத் தனதாக்கிக் குன்றுபோன்ற மதிலை எழுப்பிப் பலரைக்குடியிருத்தினன்,’ என்பது[2] முதற்குலோத்துங்கன் காலத்து நூலாகிய சமயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியும் ஏறக்குறைய இங்ஙனமே கூறுகின்றது. இங்ஙனம் வரும்செய்திகளில் ஒரளவு உண்மையேனும் இருத்தல் வேண்டும் அன்றோ? சோழ மன்னருள் கரிகாலன் ஒருவனே ஈடும் எடுப்பும் அற்ற பெருவீரனாக இருந்தான் என்பது இலக்கியமும் பட்டயங்களும் கண்ட உண்மை, பிற்காலத்தெலுங்க நாட்டுச்சோழரும் தம்மைக் ‘கரிகாலன் மரபினர்’, என்று கூறிக்கொண்டனர்[3] என்பதிலிருந்து, கரிகாலன் ஆட்சி ஆந்திரநாடுவரை பரவி இருந்தது தெளிவன்றோ? அந்தச் சோழ மரபினர் ‘எங்கள் முன்னவனான கரிகாலன், தான் வென்ற அரசரைக்கொண்டு காவிரிக்குக் கரை இடுவித்தவன்,'[4] என்று பட்டயத்திற் கூறி மகிழ்வராயின், கரிகாலன் போர் வன்மையை என்னென்பது கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன்,’ என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது.

எனவே, இதுகாறும் கூறிய செய்திகளால், கரிகாற் சோழன் காலத்திற்குள் தொண்டைமண்டலம் சோழர்ஆட்சிக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும் என்று கொள்ளுத்ல் தவறாகாது. கரிகாலன் காலம் முதல் பல்லவர் கைப்பற்றும் வரை தொண்டைமண்டலம் சோழர் ஆட்சியிற்றான் இருந்த தென்பதை இதுகாறும் எந்த ஆராய்ச்சியாளரும் மறுத்திலர். ஆதலின், கரிகாலன் காலத்தைக் கண்டறிவோமாயின், அக்காலமுதல் எத்துணை நூற்றாண்டுகள் தொண்டை மண்டலம் சோழர் ஆட்சியில் இருந்தது, என்னென்ன நலன்களைப் பெற்றது என்பன அறிய இடமுண்டாகும்.

வடநாடு சென்ற தமிழர் பலராவர். அவருள் ஒருவன் கரிகாலன்; ஒருவன் செங்குட்டுவன். இவ்விருவர் காலங்களும் கடைச் சங்கத்தையும், தொண்டைமண்டலத்தையும் பொதுவாககத் தமிழக நிலையையும் பல்லவர்க்கு முற்பட்ட இந்திய நாட்டு வரலாற்று நிலையையும் அறியப் பேருதவி புரிவன ஆதலின், முதற்கண் செங்குட்டுவன் காலத்தைக் கண்டறிய முயல்வோம்.

செங்குட்டுவன்காலம்

கரிகாலன் காலத்தை ஆராயப் புகுந்த திரு. ஆராவமுதன் என்பார் தமது நூலில், “தமிழ் வேந்தர் வடநாடு நோக்கிப் படையெடுத்த காலம் (1) அசோகனுக்குப் பிறபட்ட மோரியர் (கி.மு.232 - கி.மு. 184) காலமாகவோ, (2) புஷ்யமித்ர சுங்காவுக்குப் பிற்பட்ட (கி.மு. 148 - கி.மு. 27) காலமாகவோ, (3) ஆந்திரர் ஆட்சி குன்றிய கி.பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகவோ இருத்தல் வேண்டும்” என முடிவு கூறினார்.

இவர் கூறிய மூன்று காலங்களில் முதல் இரண்டு காலங்களும் பொருத்தமானவையே ஆகும். ஆயின், மூன்றாம் காலம் கி.பி. 163-300[5] வரை அஃதாவது, குப்தர் பேரரசு ஏற்படும் வரை எனக் கொள்ளலே முறை. என்ன? கி.பி. 163இல் இறந்த (கவுதமிபுத்திர சதகர்ணியின் மகனான) புலுமாயிகுப் பின்வந்த ஆந்திர அரசர் வலியற்றவர்[6] எனப்படுதலின் என்க. எனவே,தமிழரசர் வடஇந்தியாமீது படையெடுக்க வசதியாக இருந்த மூன்று காலங்களாவன:- (1)கி.மு. 232-கி.மு.184, (2) கி.மு.148-கி.மு.27. (3) கி.பி.163-300. இனி இவற்றுள் செங்குட்டுவன் காலம் யாதென ஆராய்வோம்.

செங்குட்டுவன் பத்தினிக்கு விழா எடுத்தபோது வந்திருந்த அரசருள் ‘கடல்சூழ் இலங்கைக் கயவாகு ஒருவன்’ எனச்சிலப்பதிகாரம் செப்புகிறது. இலங்கையில் இருந்த பத்தினிச் சிலை ஒன்று இப்போது பிரிட்டிஷ் காட்சிச் சாலையில் இருப்பதைக் கொண்டும், சிலப்பதிகாரக் கூற்றைக் கொண்டும் - கயவாகு இலங்கையில் பத்தினிக்கொரு கோயில் எடுப்பித்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. இக்கயவாகுவின் காலம் கி.பி.171-193 என இலங்கைப் பட்டயம் இயம்புகின்றது.[7] (இரண்டாம் கயவாகுவின் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பதை ஈண்டு நினைவு கொள்ளல் நலமாகும்). இதுவே செங்குட்டுவன் வாழ்ந்த காலமாகும். இக்காலம் மேற்கூறிய மூன்று காலங்களில் இறுதிக் காலத்துடன் ஒன்றுபடுகிறது. இக்காலத்தே, கி.பி.166-196 வரை தமிழகத்துக்கு வடக்கே கங்கையாறு வரை சிறப்புற்றிருந்த ஆந்திர சதகர்ணி அரசன் யக்ஞஸ்ரீ[8] என்பவன். இச் ‘சதகர்ணி’ என்பதன் மொழிபெயர்ப்பே ‘நூற்றுவர் கன்னர்’ எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது. இந்நூற்றுவர் கன்னர் செங்குட்டுவனுக்கு நண்பர்; கங்கையாற்றைக்கடக்க உதவியவர். கயவாகுவின் காலமும் யக்ளுழநீயின் காலமும் ஒன்றுபடுதலால் இவ்விருவரும் செங்குட்டுவன் காலத்தவர் என்பதும் நூற்றுவர் கன்னர் என்று சிலப்பதிகாரம் குறித்தது யக்ஞரு சதகர்ணியையே (அவன் ஆணைபெற்ற உயர்அலுவலாளரையே) என்பதும் நன்குபுலனாகும். இக்கருத்தையே அறிஞர் பலர் உறுதிப்படுத்துகின்றனர்.[9]

கயவாகுவின் காலம் - கி.பி. 171-193
யக்ஸ்ரீயின் காலம் கி.பி. 166-196

எனவே, கி.பி. 166-193க்கு உட்பட்ட காலத்தேதான் செங்குட்டுவன் வடநாடு சென்று மீண்டிருத்தல் வேண்டும். இக்காலம் முற்கூறிய படையெடுப்புக்கு உகந்த மூன்றாம் காலத்தோடு (கி.பி.163-300) ஒத்துவருதலும் காண்க.

கரிகாலன் காலம்

வடநாட்டுப் படையெடுப்புக்குரிய மூன்று காலங்களில் ஈற்றுக்காலத்தைச் செங்குட்டுவதற்கு உரிமை ஆக்கினமையின், பிற இரண்டு காலங்களில் ஒன்றே கரிகாலனுடையதாகும். கரிகாலன் இலங்கைத் தீவை வென்று ஆயிரக்கணக்கான அடிமைகளைக் கொணர்ந்தான் என்பது கவனித்தற்குரியது. இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் “(1) கி.மு. 170 கி.மு.100 வரை இலங்கையைத்தமிழரசர் ஆண்டனர்; (2) கி.மு. 44-கி.மு.17க்கு இடைப்பட்ட காலத்தில் 15 ஆண்டுகள் தமிழர் இலங்கையை ஆண்டனர்; (3) கி.பி. 660-1065க்கு உட்பட்ட இடைக்காலத்தில் தமிழர் இலங்கைமீது படைஎடுத்தனர்.” என்று கூறுகின்றது. இவற்றுள் முதல் இரண்டு காலங்களில் ஒன்று கரிகாலன் தொடர்பு பெற்றதாகல் வேண்டும். இவ்விரண்டும் வடநாட்டுப்படையெடுப்புக்கு ஏற்ற காலங்களோடு பொருந்துகின்றனவா என்பதைக் காண்போம்.

(1) வடநாட்டுப் படையெடுப்புக்கேற்ற முதற்காலம் கி.மு.232 - கி.மு. 184.

இலங்கையைத் தமிழர் ஆண்ட முதற்காலம் கி.மு. 170-கி.மு.10[10]

(2) வடநாட்டுப் படையெடுப்புக்கேற்ற இரண்டாம் காலம் கி.மு.148-கி.மு.27

இலங்கையைத் தமிழர் ஆண்ட காலம் கி.மு.44 கி.மு.17க்கு உட்பட்ட 15 ஆண்டுகள்.

இவற்றுள் முன்னதைவிட இரண்டாம் காலமே மிகவும் பொருந்துவதாகும். இக்காலமே கரிகாலன் காலம் என்பதை இலக்கியம் கொண்டும் நிறுவலாம். இக்காலத்தில் கடல் வாணிபம் உயர்நிலையில் இருந்தது. கி.மு.39 முதல் கி.மு.14 வரை ரோமப் பேரரசனாக இருந்த அகஸ்டஸ் என்பானிடம் பாண்டிய மன்னன் தூதுக் குழு ஒன்றை அனுப்பினான் என்பதும் நோக்கத்தக்கது. கரிகாலன் காலத்தில் புகார் சிறந்த துறைமுகப்பட்டினம் என்பதைப் பட்டினப்பாலையால் உணரலாம். இச்சிறப்புடைக் கடல் வாணிபம் கி.பி.215 வரை, அஃதாவது அலெக்சாண்ட்ரியப் படுகொலை வரை சிறப்புற நடந்து வந்தது.[11]

புதிய சான்று

சோழ மன்னருள் இமயம்வரை சென்று மீண்டவன் கரிகாலன் ஒருவனே என்பது வெளிப்படை அவன் சென்று மீண்டது உண்மையே என்பதற்குப் புதியசான்று ஒன்று கிடைத்துள்ளது. “சிக்கிம் நாட்டுக்குக் கிழக்கே அதற்கும் திபேத்துக்கும் உள்ள எல்லையே வரையறுத்து நிற்கும் மலைத் தொடர்புக்குச் சோழ(ர்) மலைத்தொடர் (Sola Range) என்றும், அதனை அடுத்துள்ள பெருங் கணவாய்க்குச் சோழ(ர்) கணவாய் (Sola Pass) என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. ‘சோல’ (ழ) என்பதுசிக்கிம்,திபெத் மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருந்தவில்லை”[12] என இராவ்சாகிப் மு. இராசுவையங்கார் அவர்கள் புதிதாகக் கண்டறிந்து வெளியிட்டுள்ள செய்திக்குத் தமிழகம் நன்றிபாராட்டக் கடமைப்பட்டுள்ளது.

இதுகாறும் கூறியவற்றால், கரிகாற் சோழன் வடநாடு சென்று. சிலப்பதிகாரம் கூறுவதுபோல,

“பகைவிலக்கியதிப் பயங்கெழு மலையென
இமையவர் உறையும் சிமயப் பீடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற்”

பெயர்ந்தமை உண்மை என்பதும், அக்காலம் கி.மு. முதல் நூற்றாண்டின் இடைப்பட்ட காலமே ஆதல் வேண்டும் என்பதும் நன்கு விளங்கும் செய்திகளாம்.

வடநாட்டு நிலைமை

கரிகாலன் ஆட்சிக் காலம் எனக்கொண்ட கி.மு.60 கி.மு.20க்கு உட்பட்ட காலத்தில் மகதப் பேரரசு சுங்கர் கையினின்றும் கண்வ மரபினர் கைக்குமாறிவிட்டது. கி.பி.73இல் ‘வாசுதேவ கண்வா’, மகத நாட்டு அரசன் ஆனான். அவனுக்குப் பின் மூவர் கி.மு.28 வரை ஆண்டனர். அவருக்குப் பிறகு மகதநாடு ஆந்திரா வசப்பட்டது. எனவே கரிகாலன் படையெடுத்த காலத்தில் கண்வ மரபினரே மகத நாட்டை ஆண்டவராவர். அவர்கள் வலியற்ற அரசர்களே[13] அவர்கள் காலத்தில் கெளசாம்பியைக் கோ நகரமாகக் கொண்ட வச்சிர நாடும், உச்சையினியைத் தலைநகராகக் கொண்ட அவந்தி நாடும் தம்மாட்சி பெற்றிருத்தல் வேண்டும். இல்லையேல், கரிகாலன் இமயம் சென்று மீண்டபோது மகதநாட்டரசன் பட்டி மண்டபமும், வச்சிரநாட்டு வேந்தன் கொற்றப் பந்தரும், அவந்தி வேந்தன் தோரண வாயிலும் கொடுத்தனர் எனச்சிலப்பதிகாரம் செப்புவதில் பொருள் இராதன்றோ? இந்நாட்டரசர் சந்திரகுப்த மெளரியன் காலத்திலிருந்து சிற்றரசராகவும் அடிமைப்பட்டும் ஹர்ஷனுக்குப் பின்னும் இருந்து வந்தனர் என்பதற்கு வரலாறே சான்றாகும்.[14]

கோச்செங்கட் சோழன்

இதுகாறும் கூறிவந்த சான்றுகளால் (1) கரிகாற் சோழன் காலம் ஏறக்குறைய கி.மு.60 கி.மு.20 எனவும், (2) செங்குட்டுவன் வடநாடு சென்ற காலம் ஏறக்குறைய கி.பி. 166-193 எனவும் கூறலாம். செங்குட்டுவன் 50 ஆண்டுகள் அரசாண்டவன் எனச்சிலப்பதிகாரம் கூறலால், அவன் காலம் ஏறத்தாழக் கி.பி. 150-200 எனக் கோடலே பொருத்தமுடையதாகும். இச் சேரன் செங்குட்டுவனால் முறியடிக்கப்பட்ட சோழன் ஒன்பதின்மருள் ஒருவனான சுபதேவன் சிதம்பரத்தில் தலைமறைவாக வாழ்த்து வந்தான். அவனுக்குச் சிவபிரான் அருளாற் பிறந்தவனே சிறந்த சிவபக்தனான கோச்செங்கட் சோழன் என்பவன்.[15] இவன் சோணாட்டைப் பேரரசனாக இருந்து ஆண்டான் சேரனைப் புறங்காட்டச் செய்து கனவழி பாடப் பெற்றான். எனவே, இவன் காலம் ஏறக்குறைய கி.பி. 200-225 எனக் கூறலாம். இவனைப் பாடிய பொய்கையாரே முதல் ஆழ்வார் மூவருள் ஒருவராகிய பொய்கை ஆழ்வார்.[16] இக்கோச் செங்கட்சோழன் மணிமேகலையில் கூறப்பட்ட பெருங்கிள்ளிக்குப் பின் சோழ மன்னனாக இருந்திருத்தல் வேண்டும். இவன் சிவபிரான் அருளால் தோன்றியவன் ஆதலின், தான் பிறந்த சிதம்பரத்தைச் சிறந்த சிவப்பதியாக்கினான்; தில்லைவாழ் அந்தணரைக் கொண்டு முடிசூட்டிக் கொண்டான். அன்று முதல் சோழர்க்கு முடிசூட்டும் பொறுப்புத் தில்லைவாழ் அந்தணரிடம் விடப்பட்டது. இவன் பொய்கை ஆழ்வாரால் பாடப்பட்டமையின், சைவ-வைணவ சமயங்களில் பொது நோக்குடையவனாக இருந்தான் என்பதும், கி.பி.8ஆம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் இவனைப் பாடி 70 கோயில்களைக் கட்டியவன்[17] எனப் பாராட்டலால், இவன்திருமால் கோயில்களையும் கட்டியவன் என்பதும் நன்குஉணரலாம். கி.பி. 7ஆம் நூற்றாண்டிலேயே இவனைப் பற்றிய புராணக் கதைகள் பலவாறு கிளம்பின என்பதிலிருந்து இவன் அப்பர் - சம்பந்தர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டவன் என்பது நன்கு விளங்குமன்றோ?[18] சுருங்கக் கூறின், நாயன்மார் காலச் சைவ சமய வளர்ச்சிக்கு அடிப்படை இட்ட சிறந்த சைவன் இப்பேரரசன் என்றே கூறுதல் வேண்டும். கோச்செங்கட் சோழற்குப் பிறகும் களப்பிரர் புகுவுக்கு முன்பும் (கி.பி.225-250) சோணாட்டை ஆண்ட பேரரசர் புகழ்ச்சோழ நாயனார் என்பவராதல் வேண்டும். என்னை? இவர் பேரரசர்; பல நாடுகளை வென்றவர் எனச் சேக்கிழார் கூறலாலும், சோணாடு களப்பிரர் கைக்குப் போன கி.பி.3ஆம் நூற்றாண்டின் இடைக்கால முதல் விசயாலயச் சோழன் தோன்றிய கி.பி. 580 வரை சோழர் சிற்றரசராக இருந்தனர் என்பது வரலாறு கூறும் உண்மை ஆதலாலும் என்க.[19]

இனிக் கரிகாலன் காலம் முதல் புகழ்ச்சோழர் காலம் வரை (கி.மு.60-கி.மு.250) சோணாட்டின் வடபகுதியாக இருந்த தொண்டை மண்டலம் எங்ஙனம் இருந்தது என்பதை நூல்களைக் கொண்டு காண்போம்.

காஞ்சியின் பழைமை

வடமொழிப் புராணங்களின் கூற்றுப்படி காஞ்சிமா நகரம் இந்தியாவில் உள்ள புண்ணியப் பதிகள் ஏழனுள் ஒன்றாகும். இயூன்-சங் கூற்றுப்படி, புத்தர் கி.மு.5ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வந்துசமய உண்மைகளை உரைத்தார்; அசோகன் பல தூபிகளை நாட்டிப் பௌத்த சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தான். நாலந்தாப் பல்கலைக் கழகத்தில் சிறந்த பேராசிரியராக இருந்த தர்மபாலர் காஞ்சிபுரத்தினர் என்று கூறப்பட்டுள்ளனர். அசோகன் கட்டிய தூபிகளில் ஒன்று இயூன்-சுங் காலத்தில் 100 அடி உயரத்தில் காஞ்சியில் இருந்ததாகத்தெரிகிறது. [20]

கி.மு. 150 இல் இருந்த பதஞ்சலி தமது மாபாடியத்தில் காஞ்சிபுரத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனவே கி.மு.2ஆம் நூற்றாண்டிலேயே காஞ்சிமாநகர் சிறந்த கலைப்பீடமாக இருந்ததெனலாம். [21]

கி.மு. முதல் நூற்றாண்டில் சோணாட்டை ஆண்ட கரிகாலன் காலத்தில் சோழ நாட்டிற்கு வடக்கே தொண்டை மண்டலம் காவல் இடமாக இருந்தது. காஞ்சியைக்கரிகாலன் அழகு செய்தான்; மதில்கள் எழுப்பினான். வடவேங்கடம் வரை நாட்டை விரிவாக்கினான்: வேளாண் குடிகளைக் கொணர்ந்து நாட்டைச் செழிப்பாக்கினான். அவன் காலத்துத் தொண்டைமான் இளந்திரையன் சோழர் சார்பாக நின்று தொண்டை நாட்டை ஆண்டு வந்தான். அவன் காலத்தில் தொண்டைநாடு வளமுற்று இருந்தது.”[22]

மாமல்லபுரம்

இது சிறந்த கடற்கரைப் பட்டினமாக விளக்கமுற்று இருந்தது. வடக்கேயிருந்து குதிரைகளைக் கொண்டு வந்த நாவாய்கள் சூழந்திருந்தன. பரதர் மலிந்த தெருக்களும் காவலர் காத்த பண்டசாலைகளும் இருந்தன. அங்கிருந்த மாடங்களில் பெண்கள் பந்தை அடித்து விளையாடி மணற் பரப்பில் கறங்காடினார்கள். கடற்கரையில் வானளாவிய மாடங்களில் வைத்தவிளக்குகள் கடலிற் சென்ற நாவாய்களில் இருந்தவர்க்குத் துறையை அறிவித்தன.[23] தொண்டைமான் காலத்தில், ஏன்? சங்ககாலத்திலேயே காஞ்சிபுரம் கச்சி என்ற பெயர் பெற்று இருந்தது. அந்நகரம் சிறந்த உலக நகரங்களுள் ஒன்று தேரோடும் தெருக்களையும் பழங்குடிகளையும் மதிலையும் உடையது. இளந்திரையன் பாண்டவரைப் போலப் பகைவரை வென்றவன்: தொண்டையர்குடியிற் பிறந்தவன்: பகைவர் அரண்களை அழித்தவன்: யானைகள் கொணர்ந்த விறகால் வேள்வி செய்தமுனிவர்கள் வாழ்ந்த மலைகட்கு உரியவன்; நான்கு குதிரைகள் பூட்டியதேரை உடையவன்.[24]

ஆனால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலும் கடைப் பகுதியிலும் அஃதாவது, சிலப்பதிகார மணிமேகலைக் காலத்தில் காஞ்சிபுரம் இளங்கிள்ளி என்பவன் ஆட்சியில் இருந்ததாகத்தெரிகிறது. அவன் புத்தர் கோயில் ஒன்றைக் கட்டியிருந்தான். அங்குச் சென்ற மணிமேகலை புத்த பீடிகையை அமைத்தாள்: தீவதிலகையையும் மணிமேகலா தெயவத்தையும் வழிபடக்கோட்டங்கள் அமைத்தாள்; பின்னர் அறவண அடிகளிடம் தவத்திறம் பூண்டு தருமம் கேட்டாள்; ‘பவத்திறம் அறுக, என்று அங்குத்தானே தவம் கிடந்தாள்.[25]

வலியற்ற வட எல்லை

இளங்கிள்ளிகாலத்தில் தொண்டைநாடு நெல்லூர்க் கோட்டத்தில் உள்ள பாவித்திரி (ரெட்டிபாளையம்) வரை பரவியிருந்தது. அங்குக கிடைக்கும் பட்டயங்கள் அப்பகுதியைக் ‘கடல் கொண்ட காகந்திநாடு என்று கூறுகின்றன. நகரி மலைகளைச் சார்ந்த குறிஞ்சிப் பகுதி தொண்டை மண்டலத்தின் வட எல்லையாகும். அந்தப் பகுதியில், வடக்கே இருந்த சாதவாகனர் (ஆந்திரர்) க்கும் தொண்டை மண்டலத்தை ஆண்ட சோழர்க்கும் எப்பொழுதும் எல்லைப் பூசல்கள் நடந்து வந்தன. எனவே, இப் பகுதி வன்மை குன்றிய பகுதியாகும். அப்பகுதியில் இளங்கிள்ளி காலத்தில் சேரனும் பாண்டியனும் பெரும்படையோடு வந்து போரிட்டனர். காரியாறு (காலேரு தெலுங்கில்) என்னும் ஆற்றங்கரையில் இளங்கிள்ளி அவர்களை முறியடித்தான். இந்தப் பலம் குன்றிய வட எல்லையே சாதவாகனர் பேரரசில் தென்கிழக்கு மாகாணத் தலைவராக இருந்த பல்லவர் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றப் பேருதவி செய்ததாகும்.[26] இந்த இளங்கிள்ளியின் ஆட்சி ஏறக்குறையக் கி.பி. 200 வரை இருந்தது என்னலாம்.

மணிமேகலை என்னும் காவியத்திலிருந்து, பெருங்கிள்ளி காலத்தில் புகார் கடல் கொண்டதென்பதை அறியலாம். அங்கிருந்த அறவண அடிகள் முதலிய பெளத்தரும் சான்றோரும் பிறநாடு புக்கனர் என்பதால் சோழர் தலைநகரமும் உறையூருக்கு மாறியிருத்தல் வேண்டும் என்று கருத இடமுண்டு. இந்நிலையில் இளங்கிள்ளிக்குப்பின் தொண்டை நாட்டையாண்ட சோழ அரசியல் தலைவன் வன்மையற்றவனாக இருந்திருக்கலாம். மேலும், வடவர் படையெடுத்தபொழுது, தலைநகரை இழந்த வருத்த நிலையில் இருந்த சோழ வேந்தன் உடனே தக்க படைகளை உதவிக்கு அனுப்ப முடியாமல் இருந்திருக்கலாம்; அல்லது உறையூரிலிருந்து படைகள் அனுப்ப முடியாது தவித்திருக்கலாம். இன்ன பிற காரணங்களால் ஏறக்குறைய 300 ஆண்டுகள் (கி.மு.60-கி.பி.250) வரை சோழப் பேரரசுக்கு இருந்த தொண்டை மண்டலம், கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் ஆட்சிக்கு மாறிவிட்டது. மணி மேகலையை நன்கு ஊன்றிப் படிப்பவர். கி.பி.2ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர் வலிகுன்றத் தொடங்கிய உணரலாம்.


  1. R.Gopalan’s Pallava of Kanchi, pp.26.27
  2. திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், செ.85
  3. K.A.N.Sastry’s Cholas Vol.pp.121, 122.
  4. bid.p.44
  5. Vide his ‘Sangam Agé’, pp.56,57
  6. C.S. Srinivasacnhari “History of India’ P49
  7. Archaeological Survey of Cylon, xiil 1896, pp.47,48.
  8. W.A.Smith’s “Early Histoy of India’, p.22, 34th ed.
  9. K.G. Sesha Iyer in the “Christian College Magazine’, Sep. Oct. 1917. Dr. S.K. Aiyankar’s “Manimekalai in its Historical Setting’ pp. 105,106
  10. A short History ofceylon’ pp. 722-725 by Dr. W.Gelgerin “Buddhistic Studies’ edited by Dr. B.C.Law.
  11. V.A. Smith’s “Early History of India,” p.471
  12. கலைமகள் (1932) தொகுதி 1, பக். 62, 63
  13. V.A. Smith’s “Early History of India,’ pp.215,216.
  14. V.A. Smith’s Early History of India’, p.369
  15. Dr. S.K.Alyangar’s Ancient India, pp.95-6
  16. Dr. S.K. Aiyangar’s “Early History of Vaihaavism in S.India’ pp.72-75
  17. திருவானைக்கா, திருஅம்பர், நன்னிலம், வைகல், காடக்கோயில் முதலியன இவனால் கட்டப்பட்டன.
  18. R.Gapalan’s “Pallavas of Kanchi’, p.31.
  19. C.V.N. Iyer’s “Origin and Development of Saivism in S.India,’ p.183
  20. Beal Rec. II. p.230
  21. D.Sircar’s “Seccessors of the Satavahanas,p. 140
  22. உலகநாதபிள்ளை, ‘கரிகாற் சோழன், பக். 40
  23. பெரும்பாணாற்றுப்படை, அடி 320-325
  24. Ibid II. 410-500
  25. Ibid II. 28-30
  26. Dr. S.K. Aiyangar’s “Manimekali-in Historical Setting,’ pp.49-50