புது ஓவர்சியர்/நதி உடைப்பில்

விக்கிமூலம் இலிருந்து

சைக்கிளில் வந்து இறங்கிய இருவரில் ஒருவர் புது ஓவர்சியர் ஸ்ரீமான் சம்பந்தம் பிள்ளை என்று நேயர்கள் ஊகித்திருக்கலாம். மற்றொருவர் லயன் கரை மேஸ்திரி. நதியில் பிரவாகம் அதிகமாயிருப்பதை முன்னிட்டு, அவர்கள் லயன்கரையில் பந்தோபஸ்துக்காகப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். சம்பந்தம் பிள்ளைக்கு முதலில் ஒரு நிமிஷம் தெளிவாக விளங்கவில்லை. உடையார் மண் வெட்டியை ஆற்றில் எறிந்ததுமே விஷயம் வெட்ட வெளிச்சமாய்ப் புலப்பட்டது. அப்போது சம்பந்தம் பிள்ளைக்கு உண்டான ஆத்திரம் அவ்வாற்றின் பிரவாகத்தைப்போல் அளவிட முடியாததாயிற்று. அவர் ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து வந்து, உடையாரின் கழுத்துத் துணியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு "அடே பாதகா! துரோகி! என்ன கொலை பாதகம் செய்தாய்!" என்றார். அவர் உடல் நடுங்கிற்று. தலையைக் கையினால் பிடித்துக் கொண்டு ஒரு கண நேரம் யோசித்தார். பின்னர், உடனே திரும்பி மேஸ்திரியைப் பார்த்து "ஓடும் ஓடும்! கிராமத்துக்கு ஓடிப்போய் வைக்கோல், மண்வெட்டிச் சாமான்களுடன் ஆள் திரட்டிக் கொண்டு வாரும்" என்றார். மேஸ்திரி சைக்கிளில் ஏறிக் குறுக்கு வழியில் அதி வேகமாகச் சென்றார்.

உடையார் சிந்தித்தார். அவர் உள்ளத்தில் ஒரு கொடும் யோசனை உதித்தது. 'செய்வன திருந்தச் செய்' என்றபடி, இந்த அதிகப்பிரசங்கியை வெட்டி ஆற்றில் விட்டு விட்டாலென்ன? அவன் ஒருவன்; நாம் இருவர். ஆனால், அடுத்த கணத்தில் இது உசிதமானதெனத் தோன்றவில்லை. ஆள் திரட்டச் சென்ற மேஸ்திரி சிறிது நேரத்தில் திரும்பி விடுவான். அவனும் ஊராரும் சாட்சி சொல்வார்கள். ஆயுதமும் இல்லை, மேலும் நதி மண்வெட்டியை விழுங்கேமேயல்லாமல் பிணத்தை விழுங்காது, எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொரு தடை குறுக்கிட்டது. பக்கத்திலிருந்த கேசவனைக் காணோம். ஏதோ பெருந்தொல்லை இருக்கிறதென்றறிந்த அவன் சவாரி விட்டுவிட்டான்.

எனவே, அந்த யோசனையை உடையார் தள்ளி வழக்கமான உபாயத்தையே கைக்கொள்ளத் தீர்மானித்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "ஏன் ஸார், புது ஓவர்ஸியர் வந்திருப்பதகாச் சொன்னார்களே, தாங்கள்தானோ?" என்று வினாவினார்.

சம்பந்தம் பிள்ளை, உடையாரின் கழுத்தில் மாலையாகப் போட்டிருந்த அங்க வஸ்திரத்தின் இரு முனைகளையும் சேர்த்து இறுகப் பிடித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் கண் உடைப்பின் மீதே பதிந்து கிடந்தது. ஒவ்வொரு கணமும் கரை இடிந்து விழுந்து உடைப்புப் பெரிதாகிக் கொண்டிருந்தது. நீரின் வேகம் கீழ்மண்ணையும் அறுத்துக் கொண்டு வந்ததென்று கரைக்கு மறு புறத்தில் விழும் தண்ணீரின் அளவினால் நன்கு தெரிந்தது. சம்பந்தம் பிள்ளையின் உள்ளம் பதைத்தது. உடைப்புப் பெரிதாகமல் தடுக்க எதுவும் செய்ய முடியாதிருந்த காரணத்தினால், அவர் துன்பம் அதிகமாயிற்று. பாதகன் மண்வெட்டியைக்கூட அல்லவா ஆற்றில் எறிந்துவிட்டான்.

இத்தருணத்தில் உடையார் மேற்கண்டவாறு கேட்கவே, சம்பந்தம் பிள்ளையின் கண் அவர்மீது சென்றது. பார்வைக்கு மட்டும் மனிதனை எரிக்கும் சக்தியிருந்தால் சம்பந்தம் பிள்ளை அப்பார்வையினாலேயே உடையாரை எரித்திருப்பார். அது சாத்தியமில்லாமல் போகவே அவர் பதிலும் சொல்லவில்லை.

"தங்களைப் பார்க்க நேர்ந்தது குறித்து நிரம்ப சந்தோஷம். தங்களுக்கு முன்னாலிருந்த ஓவர்ஸியர் எனக்கு நிரம்பப் பழக்கமானவர். இந்தப் பக்கம் வந்தால் நம்முடைய பங்களாவில்தான் தங்குவார். ஏன், ஸப் டிவிஷனல் ஆபீஸர், அஸிஸ்டெண்ட் என்ஜினீயர் முதலியோர்கூட நமக்கு அதிகப் பழக்கமானவர்கள்தான். என் பெயரைக் கூடத் தாங்கள் கேள்விப்பட்டிருக்கலாமே! நான் தான் கோவிந்தராஜ உடையார் என்பது" என்று கூறி, உடையார் குறுநகை புரிந்தார்.

இந்த மனிதருடைய துணிவும், அகம்பாவமும் சம்பந்தம் பிள்ளைக்கு அளவிலா ஆச்சரியமளித்தன. இந்த நிலையில் இப்படிப் பேசக்கூடிய ஒருவர் இருப்பாரென அவர் கனவிலும் கருதியிருக்க முடியாது. எனவே, அவர் ஸ்தம்பித்துப் போனார்.

உடையார் தன் கை விரலில் அணிந்திருந்த வைரக்கல் மோதிரத்தைக் கழற்றி, அதை நட்சத்திர ஒளியில் சிறிது காட்டி ஓவர்ஸியர் கண்முன் 'டால்' வீசச் செய்து, பின்னர்ப் புன்னகையுடன் "என்னுடைய ஞாபகார்த்தமாக இருக்கட்டும்" என்று சொல்லிக்கொண்டே அதை அவர் விரலில் மாட்டப் போனார்.

இப்போது சம்பந்தம் பிள்ளையின் ஆத்திரம் கரை கடந்தாயிற்று. அந்த மோதிரத்தை அவர் உடையார் கையிலிருந்து பிடுங்கி வீசி எறிந்தார்? மோதிரம் ஆற்று மத்திக்குச்சென்று, விழுந்த இடந்தெரியாமல் மறைந்தது.

"நல்லது, ஸார்! இவ்வளவு கோபம் எதற்காக? நாமெல்லாரும் பரஸ்பரம் உதவி செய்து கொள்ள வேண்டியவர்கள். ஆனாலும், இது கொஞ்சம் பெரிய விஷயந்தான். நம்முடைய வீட்டுக்கு வாருங்கள். ஒரு நோட்டு தந்துவிடுகிறேன்" என்றார் உடையார்.

"உம்முடைய நோட்டைக் கிழித்து இந்த உடைப்பில் கொண்டு வந்து போடும்! உமக்கு இவ்வுலகத்துக் கோர்ட்டுக்களில் அளிக்கப்படும் தண்டனை போதவே போதாது. கடவுளே உம்மைத் தண்டிக்க வேண்டும்" என்றார் சம்பந்தம் பிள்ளை. அவர் கண்ணில் தீப்பொறி பறந்தது. உடையார் சிந்தித்தார். தண்டனை என்றதும் அவருக்குத் தம் செயலினால் விளையக் கூடியவையெல்லாம் சட்டென்று மனதில் தோன்றின. பணச்செலவு, அவமானம், போலிஸ், கோர்ட், சிறை-எல்லாம் நினைவுக்கு வந்தன. முடிவில் ஆயுள் பரியந்தம் சிட்சை விதித்தாலும் விதிக்கலாம். உடையார் சிறிது அச்சமடைந்தார்.

"சரிதான் ஐயா! உமக்கு என்னதான் வேண்டும்? சொல்லிவிடும்" என்றார்.

"உமது தலையில் இடி விழ வேண்டும்; இந்த வெள்ளம் உம்மை விழுங்க வேண்டும். அதுதான் எனக்கு வேண்டும்."

"ஐயாயிரம் ரூபாய் தந்துவிடுகிறேன், உமக்கு நம்பிக்கையில்லாவிடில் காகிதம் பேனா கொடும். இங்கேயே கைசீட்டு எழுதித் தருகிறேன்."

"இப்போது நீர் எழுத வேண்டுவது வாக்கு மூலந்தான். ஆனால் இங்கே வேண்டாம். மாஜிஸ்டிரேட் முன்பு எழுதலாம்."

"இதற்கு முன் நான் எவருக்கும் பதினாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்ததில்லை. ஒரே ஒரு முறை ஒரு முக்கியமான வாய்க்கால் தகராறில் மட்டுமே பதினாயிரம் கொடுத்திருக்கிறேன். இப்போது அந்தப் பதினாயிரம் உமக்குத் தருகிறேன். இதைத் தவிர, உடைப்பு சம்பந்தமான கண்டிராக்டுகளில் உமக்குரிய விகிதம் கொடுத்துவிடுகிறேன்."

"சும்மா வாயை மூடிக்கொண்டிரும், சர்க்கார் உத்தியோகஸ்தருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றம் வேறு உம்மீது சாரும். ஜாக்கிரதை!"

"புது ஓவர்சியர் கலியுக அரிச்சந்திரன் என்று சொன்னார்கள். இருந்தாலும், நீர் இவ்வளவு மோசமாயிருப்பீர் என்று நினைக்கவில்லை. நன்றாக சிந்தித்துப் பாரும். பதினாயிரம் ரூபாய் உம்முடைய பத்து வருஷச் சம்பளம். வட்டிக்குப் போட்டால் வட்டியே சம்பளத்துக்கீடாகும். வலிய வரும் லக்ஷ்மியை யாரேனும் உதைப்பார்களா? உமக்கு முன்னிருந்த ஓவர்சியர் பத்து ரூபா, ஐந்து ரூபாய்கூட வாங்குவார். நீர் பதினாயிரம் ரூபா வேண்டாமென்கிறீர். என்ன அநியாயம்!"

"அநியாயம்" என்ற வார்த்தையைக் கேட்டதும் சம்பந்தம் பிள்ளைக்குத் தம்மையறியாமல் சிறிது சிரிப்பு வந்தது. ஆனால், திரும்பி உடைப்பைப் பார்த்ததும் சிரிப்பெல்லாம் பறந்து போயிற்று. உடைப்பு இதற்குள் சுமார் பத்து கஜ அகலமுள்ளதாகிவிட்டது. 'ஹோ' என்ற இரைச்சலுடன் ஜலம் மோதிக்கொண்டு பாய்ந்தது. ஆயினும் என்ன பயன்? இனி வெள்ளம் வடிந்தாலொழிய உடைப்பு அடைபடுவது சந்தேகந்தான்!

ஆட்கள் தூரத்தில் வருவதை உடையாரும் பார்த்தார். இப்போதுதான் அவருக்கும் பதைப்பு உண்டாயிற்று. அவர், "ஐயா, இங்கே பாரும். கடைசியாக ஒரு வார்த்தை. உம்முடைய ஆயுளில் இத்தகைய அதிர்ஷ்டம் உமக்கு வரப்போவதில்லை. எனக்குச் சொந்தமான பூஸ்திதி முதலியவற்றைத் தவிர இன்றைய தினம் ரொக்கமாக என்னிடமுள்ள ஐம்பதினாயிரம் ரூபாய். அந்த ஐம்பதினாயிரத்தையும் உமக்குக் கொடுத்து விடுகிறேன். கொஞ்ச நஞ்சமன்று; அரை லட்சம். இதற்காக நீர் செய்ய வேண்டுவதோ ஒன்றுமில்லை. என்னையும் உடைப்படைக்க வந்தவனாகப் பாவித்துக்கொள்ளும். அல்லது நான் இங்கிருந்ததாகவே தெரிய வேண்டாம். மேஸ்திரியையும் நான் கவனித்துக் கொள்கிறேன். என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்.

"முடியாது, முடியாது" என்று அழுத்தமாகக் கூறினார் சம்பந்தம் பிள்ளை. அவர் இதயத்தில் இன்ப வெள்ளம் பாய்ந்தது. அம்பலவாணம் பிள்ளையிடம் தாம் கூறிய சபதத்தை நினைவு கூர்ந்தார். அதை நிறைவேற்றி வைப்பதற்கு மன உறுதி அளித்ததன் பொருட்டு ஆண்டவனுக்கு நன்றி செலுத்தினார். நூறா? ஆயிரமா? அரை லட்சம் ஒரு பெரிய ஆஸ்தி! தம் சபதத்தை இவ்வளவு விரைவில் நிறைவேற்றச் சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி அவர் அகமகிழ்ந்தார்.