லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அடிமை முறைகள் அழிய

விக்கிமூலம் இலிருந்து
அடிமை முறைகள் அழிய டால்ஸ்டாயின் எழுத்துப்போர்!

சொந்தக் கிராமத்திலே ஒரு விவசாயப் பண்ணையை அமைத்த டால்ஸ்டாய், அத்துறையிலே மிக வெற்றிகரமாக முன்னேறியதுடன், மக்களுக்கும் தனது பண்ணை விவசாய வழிமுறைகளைக் கற்றுக்கொடுத்து, விவசாயப் பெருமக்களுக்கு காலத்துக்கேற்ற வழிகாட்டியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.

இந்த வேளையில் அவருடைய மூத்த அண்ணன் நிக்கோலஸ் நோய்வாய்பட்டு துயரடைந்து கொண்டிருந்தார். மருத்துவர்கள் அவருக்கு எலும்புருக்கி நோய் தாக்கியுள்ளதாக முடிவு செய்து, அதற்குரிய மருத்துவ சிகிச்சைகளைத் தந்து கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையே நோய் அதிகமாவதைக் கண்ட டாக்டர்கள், நிக்கோலசை சோடேன் என்ற நகரிலே இருக்கும் காசநோய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல யோசனை கூறினார்கள். அதனால், நிக்கோலஸ் அந்நகரின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்யப்பட்டார்.

டால்ஸ்டாய், உடன் பிறந்த தங்கையுடன் புறப்பட்டார். தங்கையை முதலில் சோடேன் நகரிலே உள்ள அண்ணனிடம் அனுப்பிவிட்டு, அவர் நேரே ஜெர்மன் நாட்டுக்குச் சென்றார்.

ருஷ்ய நாட்டுக் கல்விமுறை டால்ஸ்டாய்க்குப் பிடிக்கவில்லை. அதனால், ஜெர்மன் போன்ற நாடுகளில் உள்ள கல்வி முறையைக் கண்டறிய அவர் நேரில் சென்றார். அங்கே அவர் அறிந்தவரை அங்குள்ள கல்வி முறைகள் அவருக்குத் திருப்தி தருவனவாக இல்லை. மாணவர்கள் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் பழக்கம் அங்கே இருந்தது. இந்த முறையின் போக்கும் நோக்கும் பற்றி ஜெர்மன் அறிஞர்களிடம் விவாதித்துக் கருத்தறிந்தார் டால்ஸ்டாய்.

கடைசியாக அவர் சோடேனுக்கு வந்து சேர்ந்தார். அண்ணன் நிக்கோலஸ் மரணத்துடன் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அவருடன் பிரெஞ்சுக் கடற்கரையிலே உள்ள ராய் வீல் என்ற இடத்துக்குச் சென்று டால்ஸ்டாய் தங்கியிருந்தபோது அங்க நிக்கோலஸ் காசநோய் முற்றிக் காலமானார்.

அண்ணனின் அருமை பெருமைகளையும் அவர் தன் மீது காட்டிய அக்கறையினையும். அன்பினையும் எண்ணி எண்ணி டால்ஸ்டாய் கண்ணீர் சிந்தினார். தமையனாரின் தாளாத்துயரம் அவரை மேலும் வேதனைப்படுத்தி கவலையுற வைத்தது. அந்தத் துன்பத்தை தனது நண்பருக்கு அவர் தெரியவித்தபோது எழுதிய கடிதம் வருமாறு:

“மரணம் போல் தீயது உலகத்தில் வேறொன்றும் இல்லை!” என்று என் அண்ணா நிக்கோலஸ் அடிக்கடி கூறுவார். எவ்வளவு தூரம் அந்தக் கணிப்பு சரியானது என்று இப்போது நான் அதைப் புரிந்து கொண்டேன். சாவு ஒன்றால் தான் இந்த வாழ்க்கை முடிகிறது என்றால், இந்த வாழ்க்கை முழுவதும் நாம் வாழ்ந்தது வெறும் விழலுக்கு இறைத்த நீரல்லவா?

சாவு காரணமாக நிக்கோலசுக்கு உலகத்தில் எதுவுமே மிஞ்சவில்லை என்றால், இந்த உலகத்திலே உள்ள பொருள்களைப் பெற்றிட அவர் நடத்திய வாழ்க்கைப் போராட்டமே வீணல்லவா? ஆனால், மரணம் எனது அண்ணனது கழுத்தைக் கயிறு கட்டி இறுக்கிக் கொண்டிருப்பதை அவர் சாகும்வரையிலும் என்னிடம் கூறவில்லை. பாவம்! ஆனால் அவரது சாவு அவரைத் தேடி வருவதும், நாடிவந்து நாடி நரம்புகளை நொருக்குவதும் அவருக்கு சிறிது சிறிதாகப் புரிந்தது!”

‘இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அவருக்குத் தூக்கக் கலக்கம் போன்ற ஒரு மயக்கம் வந்தது; அப்போது அவர் திடுக்கிட்டுக் கண்விழித்து’ என்ன இது என்று கேட்டார். அப்போதுதான் தான் பிறந்த மண்ணை விட்டுப் பிரியப் போவதை அவர் உணர்ந்து கொண்டார். நிக்கோலசுக்கே மரணத்திலே இருந்து மீள்வதற்குரிய மார்க்கம் தெரியவில்லையே! எனக்கு மட்டும் எப்படித் தெரியும்?...

எனவே, “இருக்கும்வரை இன்பமாக இரு பிறருக்கு உதவி செய்” என்று எளிமையாக எவரும் அறிவுரைகளையும் அறவுரைகளையும் கூறலாம்; அது சுலபமும் கூட! ஆனால், அதைக் கேட்பவர்களுக்கு வியப்பாகவே விளங்கும். ஆனால், பிறருக்கு உதவி, புரிவது; நல்லொழுக்கம், இன்பம் எல்லாமே ஒரு சத்தியத்தில் உள்ளன.

“முப்பத்திரண்டு ஆண்டுகள் இந்த உலகத்திலே! வாழ்ந்துள்ளவன் நான்; என்னுடைய வாழ்க்கையின் நிலைமை மிகப் பயங்கரமானது என்ற உண்மையையே நான் அறிந்திருக்கிறேன்.” என்று டால்ஸ்டாய் தான் எழுதிய கடித இலக்கியத்தில் வரைந்திருக்கிறார்.

இந்தக் கடிதத்தில் லீயோ, தனது அண்ணனை இழந்த துயரத்தையும், துன்பத்தையும், மயான வைராக்கியம் என்பார்களே அதுபோல குறிப்பிட்டுள்ளார். ஆனால், அது அவரது மன வளர்ச்சியைக் காட்டுகிறதே அன்றி; வாழ்க்கையின் பொருளையோ, பயனையோ அவர் அறியவில்லை என்பதல்ல. ஆனாலும் வாழ்க்கை என்பது பயனற்றது தானே? என்ற கேள்வியும் அவரது மனத்தைக் குத்திக் குடைந்திருப்பதும் தெரிகிறது அல்லவா?

சாவு என்ற அவரது சோக வடிவ உணர்ச்சி டால்ஸ்டாயின் மன நிலையை முழுவதுமாகச் சீர்குலைத்துவிட வில்லை. எனவே, ஜெர்மன், பிரான்ஸ், சுவிஸ் நாடுகளிலே உள்ள கல்வி முறைகளை முற்றிலுமாக அலசி ஆய்ந்து, ருஷ்ய நாட்டின் கல்வி முறையையும் ஆராய்ந்தார்; தொடர்ந்து அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வை நடத்தியாக வேண்டும் என்பதற்காகவே, டால்ஸ்டாய் முன்கூட்டியே வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனது தமையனார் இறந்த பிறகு கிடைத்த ஓய்வின் போது, ருஷ்யக் கல்வி முறையில் சோதனையை நடத்திடலானார்.

சோவியத் ருஷிய நாட்டில், குடியானவர்கள் அடிமைகளை விடக் கேவலமாக, கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட காலம் அது. நிலம் விற்கப்படும் போது, அதை யார் உழுது விவசாயம் செய்தானோ அவனையும் சேர்த்து அநியாயமாக விற்றுவிடுவார்கள். நிலச்சுவானின் அடிமைகள் என்று அவர்களுக்குப் பெயர்.

இந்த அடிமைப் பழக்கத்தை, கொத்தடிமை ஏகபோகத் தன்மைகளை எதிர்த்து ருஷ்ய நாட்டின் சில பகுதிகளில் பல முறைகள் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நடந்தன என்ன பயன் அவற்றால்?

ருஷிய மன்னர் இதையெல்லாம் கேட்டும், பார்த்தும், செவிகேளாராய், விழி பாராராய் இருந்து வந்தார். அதிகார வர்க்கம் இதனால், இந்த அடிமை முறைப் பழக்கத்தால் நன்மை அடைந்தது. அதனால்தான், அதிகார வர்க்கம் நிலச்சுவான் அடிமைகள் கிளர்ச்சிகளைக் கடுமையான முறையில் அடக்கியாண்டது!

1857-ஆம் ஆண்டு ஜார் நிக்கோலஸ் மறைந்து விட்ட பிறகு, அலெக்சாண்டர் என்பவர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். அவர் இயற்கையாகவே நற்குணமும் வாய்ந்தவர். இப்படிப்பட்ட ஒரு பண்பாளரிடம், மனித உரிமைகளால் நலம் பெறலாம் என்று எண்ணிய ரஷ்ய மக்களின் சீர்த்திருத்தக் காரர்களது பிரிவுகள், கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வந்தன. ஆனால், நில முதலாளிகளும், அரசியல் தலைவர்களில் சிலரும் இந்தச் சீர்திதுத்தங்களைக் கடுகளவும் விரும்பவில்லை.

ஜார் மன்னர் மக்களது கோரிக்கைகளை தலைவர்கள் ஏற்கும்படி செய்யவேண்டும் என்று ஒரு குழுவை அமைத்தார்! அந்தக் குழுவிடம் ஜார் மன்னர் சீர்திருத்தப் பொறுப்பை ஒப்படைத்தார். இந்தக் குழு மூன்றாண்டுகளாக விசாரணைகளை நடத்தி, 1861-ஆம் ஆண்டின் போது எப்படியும் அடிமைப் பழக்கத்தை, அதன்சார்பாக மனிதனை விலைக்கு விற்று விடும் மனித உரிமை மீறில்களை ஒழிந்துவிட வேண்டும் என்று அறிவித்தது.

இந்த இக்கட்டான அரசியல் சமுதாயவியல் கொடுமைகளுள் ஒன்றான அடிமை முறைப் பழக்கத்தை விளக்கி, அதன் விரிவான வரலாறுகளை உணர்வு பூர்வமாகப் பல கட்டுரைகளில் எழுதி, டால்ஸ்டாய் பெரும் எழுத்துப்போரைச் சளையாமல் நடத்தி வந்தார். அவர் எழுதிய பல கதைகளில் இந்த தத்துவ ஈனத்தைக் கண்டித்தார். அதே நேரத்தில் அந்த அடிமைகளின் கேவலமான அவல வாழ்க்கையை நன்றாக வருணனை செய்து, உணர்ச்சியே உருகும் வடிவத்தில் கதையாக்கினார். இவ்வாறு டால்ஸ்டாயால் எழுதப் பட்ட உலகப் புகழ் பெற்ற கதைகளில் ஒன்று தான் ‘போலிகோஷ்கா’ என்ற கதையாகும். அந்தக் கதையில் வரும் அடிமை ஒழிப்புத் தத்துவம், மக்கள் மனத்தை நெகிழ வைத்துக் கண்களை அருவியாக்கிக் காட்டியது. எண்ணற்றோர் அக்கதைகளை எண்ணற்ற முறைகள் படித்துக் கண்ணீர் சிந்தினார்கள்.

ஜார் நிக்கோலஸ் மாண்டு அலெக்சாண்டர் என்ற ஜார் மன்னன் அமைத்த விசாரணைக் குழுவினர் - அடிமைகளுக்கும், நிலக்கிழார்களிடமிருந்து விடுதலை அளித்தது. இதன் நடவடிக்கையின் எதிரொலியாக, டால்ஸ்டாயும் ஓர் ஊராட்சி சபைத் தலைவராக நியமனமானார்.

அடிமைகள் சார்பான நியாயங்களை உணர்ந்து டால்ஸ்டாய் வாதாடியதால் பல தலைவர்கள் அவரிடம் விரோதம் கொண்டார்கள். அதனால் டால்ஸ்டாயைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கோள்மூட்டி அவதூறு செய்தார்கள். இறுதியில், வேறு வழியில்லாமல் அவர் தனது ஊராட்சித் தலைவர் பதவிப் பெறுப்பை விட்டு விலகிவிட்டார்.

ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு அமுல் செய்யப்பட்டிருந்த கல்வித் துறை நிர்வாகத்தை ஆய்ந்த டால்ஸ்டாய், மீண்டும் அந்தக் கல்வி நிலையைப் பற்றி சோதனை செய்யலானார். அந்த சோதனையைக் கடைப்பிடித்துப் பார்க்க அவர் தனது சொந்தக் கிராமத்திலேயே ஓர் ஆரம்பப் பள்ளியை ஆரம்பித்தார். அவரது அப்பள்ளியைப் பற்றி அவர் என்ன கூறுகிறார் பார்ப்போமா?

இரண்டு மாடிக் கட்டடத்தில் அந்தப்பள்ளி இருக்கிறது. வகுப்புகள் இரண்டு அறைகளில் நடந்தன. ஆசிரியர்களுக்காக இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மற்றும் ஓர் அறை விஞ்ஞான சம்பந்தப்பட்ட கருவிகளை வைக்கவும் பயன்பட்டது. அப் பள்ளியின் நுழைவிடத்தில் மணி ஒன்று கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது.

பள்ளியின் கீழ் மாடியில் மாணவர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பாரலல், ஹரிசாண்டல் பார்கள் இருந்தன. மேல் மாடி அறையில் தச்சு வேலைக்கான கருவிகள் வைக்கப் பட்டிருந்தன. மற்றொரு பெரிய அறையில் நிகழ்ச்சி நிரல் பட்டியல் தொங்குகிறது;

அந்த நிகழ்ச்சி நிரல் விவரம் வருமாறு:

“எட்டு மணிக்கு ஆசிரியர் மணியடிக்கச் சொல்கிறார். மணியடித்துச் சிறிது நேரமானதும் அந்தக் கிராமத்துக்கும் பள்ளிக்கும் இடையில் உள்ள இடைவெளியில் சிறுவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பனிக்கும் மழைக்கும் கவலைப்படாமல் தொடர்ந்து பள்ளிக்குச் சரியான நேரத்தில் வந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் வரிசை வரிசையாக இருவர் மூவருடன் அணிவகுத்து வந்தார்கள். இதனால், ஆடு மாடுகளைப் போல ஒருவரை ஒருவர் மோதி தள்ளி, கட்டிப்பிடித்து ஓடிவரும் இழிவான நிலைகள் நீங்கின. பள்ளி மாணவர்கள் இடையிலே பள்ளி ஒழுக்கங்கள் வளர்ந்தன.

மாணவர்கள் இதுவரை கற்றக் கல்வியினால் அவர்களுடைய தனித் தன்மை அதிகமானது. புத்தகங்களையோ நோட்டுக்களையோ மூட்டை போல முதுகுகளிலே சுமந்து வரும் பழக்கம் ஒழிந்தது. அவர்களுக்கு கல்வி சம்பந்தமான வீட்டு வேலையையும் பிற பணிகளையும் செய்யச் சொல்வதில்லை.

ஏன் வீட்டு வேலைகளைச் செய்யவில்லை என்று மாணவர்களைப் பள்ளியாசிரியர்கள் மிரட்டுவதோ அடிப்பதோ என்ற பழக்க வழக்கங்கள் இல்லை. நேற்று பள்ளியில் கிடைத்த கல்வியின்பம் இன்றும் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டே பள்ளிக்கு மாணவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். நேரம் கழித்துத் தாமதமாக அவர்கள் வந்தால்; அதற்காக அவர்களுக்குத் தண்டனை தரும் வழக்கம் இல்லை. அதற்காகக் காலம் கழித்தே வரலாம் என்ற எண்ணமும் அவர்களிடம் வளர்ந்ததில்லை. சில நேரங்களில் பெரிய மாணவர்களில் சிலர், அவர்களது வீட்டில் சில வேலைகள் காரணமாக பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருந்து விடுவார்கள்; ஆனால் ஒன்று, அவர்கள் தங்களது பள்ளிப் படிப்பைத் தவறவிட்டு விடக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், தங்களது வீட்டு வேலைகள் முடிந்த பின்பு, அது எந்த நேரமாக இருந்தாலும், பள்ளிக்கு வந்து சேர்ந்து விடும் பசுமை எண்ணம் அவர்களிடையே வளர்ந்து வழக்கமாயிற்று.”

இப்படிப்பட்ட பள்ளிப் பழக்க வழக்கங்கள். ஓர் அரசுப் பள்ளியின் உருவாகுமானால், தொடர்ந்து அவ்வொழுக்கங்களைக் கடைபிடிக்கும் கட்டளை இருக்குமானால், பள்ளிக் கூடத்தில் படிக்கும் மாணவர்கள் ஏன் மகிழ்ச்சியைப் பெற மாட்டார்கள்? இதைக் கல்வி முறைப் பயிற்சியாளர்களும் அதை நடத்தும் அரசுகளும் கட்டாயமாகச் சிந்திக்க வேண்டும்.

இந்த நேரத்தில், டால்ஸ்டாய் தனது ஓய்வில்லாப் பணிகளில் காரணத்தால் உடல் நலம் குன்றினார். அதனால், இதுவரை இருந்த இடத்தை விட்டு அகன்று வேறோர் இடத்துக்குச் சென்றார்.

இடம் மாறவேண்டும் என்ற நோக்கத்துக்காக அவர் சென்றதைக் கண்ட காவல்துறையினர். அச்சமயத்தில் சந்தேகம் காரணமாக டால்ஸ்டாய் வீட்டைச் சோதனையிட்டார்கள். இந்த போலீசாரின் சோதனையைக் கண்ட அவ்வூர் கிராமமக்கள், அவரவர்கள் பிள்ளைகளை பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப மறுத்து விட்டார்கள். யார் மேல், யார், எதற்காக, இதுவரை நடந்ததென்ன, என்ற, முழு விவரங்களை ஓர் அரசு சரியாக உணராத காரணத்தால், ஒழுங்காக நடந்து வந்த ஒரு ஒழுக்கமான பள்ளி அமைப்பை அரசாங்கமே சீர் குலைத்து விட்டதை மக்கள் பிறகே எண்ணிப் பார்த்தார்கள்.

சிறுகச் சிறுகக் கட்டபட்ட தேன் கூடு போன்ற ஒரு சீரான பள்ளியை அவசரக்காரர்களது அரசு, சந்தேகத்தின் பெயரால் சிதைத்து விட்டார்களே என்று கூறி அக்கம்பக்கம் உள்ள கல்வியாளர்கள் வருத்தமடைந்தார்கள்.

வாழை ஒன்று குலை தள்ளிய பிறகு, அதனடியிலேயே வேறோர் வாழைக் கன்று வாரிசாக வளர்வது போல, டால்ஸ்டாய் நடத்திய ஆரம்பப் பள்ளியைப் பின் தொடர்ந்து வேறு சிலர் அதே போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட சில பள்ளிகளை தொடங்கி நடத்தலானார்கள். அதனால், டால்ஸ்டாய் நோக்கம் மக்கள் இடையே வெற்றிபெற்றிடும் நிலையேற்பட்டது.

இதற்குப் பிறகுதான் ருஷ்ய அரசாங்கம், டால்ஸ்டாயின் கல்விச் சோதனைகளையும், அதன் உயர்ந்த லட்சியங்களையும், அடிப்படை உணர்வுகளையும் புரிந்து கொண்டது.

ருஷ்யாவில் பொதுவுடைமைவாதிகளின் நோக்கங்கள் மக்களிடையே உணர்வு பூர்வமாகப் பரவி வந்த நேரம் அது என்பதால், இக் கல்வி முறைத் தத்துவத்தால் பொதுவுடைமைவாதிகளுக்கு அதிக செல்வாக்கும் பெருமையும் புகழும் பரவி, எதிர்காலத்தில் கம்யூனிஸ்டுகள் அதிகமாகிவிடுவார்களோ என்று ஜார் மன்னனது அரசு அச்சம் கொண்டது.

அந்த அச்சத்தின் அடிப்படையில் யோசித்த அரசு, அந்தப் பள்ளிகள் வளர்ந்தால் நாட்டின் நிலை என்னவாக இருக்கும் என்பது பற்றிய ஓர் அறிக்கையை விவரமாக அனுப்பி வைக்குமாறு அரசுக் கல்வித் துறைக்குக் கட்டளையிட்டது.

டால்ஸ்டாயின் கல்வித் தத்துவம், அவர் செய்து காட்டிய முன்மாதிரிப் பள்ளி நிர்வாக நடவடிக்கைகள் எல்லாமே போற்றத் தக்கவை, பாராட்டத்தக்கவை, எதிர்காலக் கல்வி வளர்ச்சி முன்னேற்றத்துக்கு ஏற்கத்தக்கவை என்றும், கல்வித் துறையின் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் தகுந்த அடிப்படையான ஒரு கல்விச்சோதனைக்குரிய அறிவியல் நெறிகள் என்றும் ருஷ்ய அரசு கல்வித்துறை 1862-ஆம் ஆண்டின் இறுதி வாக்கில் அரசுக்கு விரிவான அறிக்கையை அனுப்பி வைத்தது.

ஜார் மன்னனது அரசும், அதன் கல்வித் துறையும், பொது மக்களும், கல்வியாளர்களது தீர்க்க தரிசனமும் டால்ஸ்டாயின் கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தந்தும்கூட, அதே ஜார் மன்னது அரசு தனது அறிக்கையின் ஓர் முனையில், “டால்ஸ்டாயின் கருத்துக்கள் எல்லாவற்றையும் கல்வித்துறை ஏற்கவில்லை என்றும், விரும்பத்தகாத திட்டங்களை அவர் கைவிடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும், விருந்திலே நஞ்சு வைப்பது போன்று சேர்த்துக் கொண்டது.

ருஷ்ய அரசுக்கு ஏற்பட்டுவிட்ட உள்ளூர அச்சம் காரணமாக, எப்படியாவது டால்ஸ்டாயின் கல்வித் தத்துவப் பள்ளிகளை மூடிவிடவேண்டும் என்ற எண்ணமே அந்த அரசுக்கு இருந்தது. காரணம், பொதுவுடைமைக் கொள்கை ருஷ்யாவில் பரவி விடுமோ என்ற பயத்துக்கு அருமையான ஓர் அறிவியல் கல்வித்திட்டத்தை ஜார் அரசு பலிகொண்டு விட்டது.

ஆட்சியை அதிர வைக்கும் இந்த திட்டத்தை டால்ஸ்டாய் மாதிரிப் பள்ளிகளிலே போதித்த ஆசிரியர்களை கல்வித் துறையினர் பயமுறுத்தி மிரட்டி வெளியேற்றினார்கள். அந்தப் பள்ளிகளுக்கு யாரும் அவரவர் பிள்ளைகளைக் கல்வி கற்றிட அனுப்பக் கூடாது என்று கல்வித்துறையினர் தடை செய்தார்கள்.

கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்கள் இது கண்டு பயந்தார்கள்; படாதபாடு பட்டார்கள்; பெற்றோர்களும் அச்சுறுத்தப்பட்டார்கள்; மாணவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள்! இந்த நிலையில் டால்ஸ்டாயின் கல்வித் திட்டப் பள்ளிகள் நடக்குமா? எனவே, டால்ஸ்டாய் தனது கல்வித் திட்டத்தின் வெற்றியை இழந்தார் எதிர்காலக் கல்வித்துறை தனது அருமையான நாட்டுச் சேவையைக் கைவிட்டது!