வேங்கடம் முதல் குமரி வரை 5/017-019

விக்கிமூலம் இலிருந்து
17. நாகசாயி மந்திர்

நாம் யார்க்கும் குடி அல்லோம்,
நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம்
நடலை இல்லோம்,
ஏமாப் போம், பிணி அறியோம்
பணிவோம் அல்லோம், இன்பமே
எந்நாளும் துன்பம் இல்லை
தாம் ஆர்க்கும் குடி அல்லாத்
தன்மையான சங்கரன்நற்
சங்க வெண் குழை ஒர்காதில்
கோமற்கே நாம் என்றும்
மீளா ஆளாய் கொய்மலர்ச்
சேவடி இணையே குறுகினோமே

என்பது பிரபலமான ஒரு தேவாரப்பாடல். இதைப் பாடியவர் அப்பர் பெருமான் என்னும் நாவுக்காசர். சமணாயிருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன், அவரை துன்புறுத்தியதோடு, தன் முன் ஆஜர் ஆகும்படி கட்டளை பிறப்பித்தபோது அத்தகைய உத்திரவை எதிர்த்துப் பாடிய பாடல் என்பர். நாம் யார்க்கும் குடி அல்லோம் தமனை அஞ்சோம், என்று பாடும் தெம்பு ஒருவருக்கு இருந்தது என்றால் அது அவரது அஞ்சாமையையும் அவர் உள்ளத்தில் இருந்த உறுதியையுமே காட்டுகிறது. இதே உறுதி மற்ற மக்கள் உள்ளத்திலும் எழுவதற்கு அது உதவி செய்ய வேண்டாமா?

இறைவன் பால் நம்பிக்கை ஏற்படுவது என்பது எளிதான காரியமா என்ன. நாமெல்லாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தாம். ஆனால் அந்தக் கடவுள் நம்பிக்கை உரம் பெற்றதாக இல்லையே. தலைவலி என்ற உடனேயே, ஆஸ்ப்ரோ மாத்திரையைத் தேடித் தானே ஓடுகிறோம். நமச்சிவாயா, நமோ நாராயணாய என்று சொல்லி தலைவலியை விரட்டி அடிக்கும் மனப்பக்குவம் நமக்கு இல்லையே. இந்த நிலையில் ஒரு பெரியார் “நானிருக்கப்பயமேன்“ என்ற தாரக மந்திரத்தை ஓதி அதன் மூலம் நமது அசலங்களை எல்லாம் போக்கி, அருளும் ஆற்றல் பெற்றிருந்தால் அப்பெரியாரை நோக்கி மக்கள் எல்லாம் ஓடுவதில் வியப்பில்லையே! அந்த தார்க மந்திரத்தை ஓதி தன் பக்தர்களை எல்லாம் அஞ்சாது. காக்கும் அருள் வள்ளல் தான் சாயிபாபா.

அது என்ன சாயிபாபா, பேரைக் கேட்டால் முஸ்லிம் பக்கிரியின் பெயர் போல் அல்லவா இருக்கிறது என்கிறீர்களா? ஆம் கிட்டத்தட்ட 150 வருஷங்களுக்கு முன்னால் நைஜாம் ராஜ்யத்தை சேர்ந்த பாத்ரி என்ற ஒரு சிற்றூரில் ஓர் அந்தணர் குடும்பத்தில் பிறந்து பின்னர் ஒரு முஸ்லீம் பக்கிரியால் வளர்க்கப்பட்டு, இன்றை பம்பாய் ராஜ்யத்தில் கேஸர் தான் பக்கத்தில் உள்ள சீரடி என்னும் தலத்தில் வந்து தங்கியிருந்த பெரியார் அவர். இந்து முகமதியர் வேற்றுமைகளை எல்லாம் கடந்தவர். ராமும் ரஹீமும் அவருக்கு ஒன்றே. இன்று சீர்டியிலும், ஏன் இந்திய நாடு முழுவதிலுமே அவரை எண்ணிறந்த இந்துக்களும் முகம்மதியர்களும் தெய்வமாகவே போற்றி வருகின்றனர்.

அவரை வழிபடுவதால் நோய் நீங்குகின்றனர். துன்பம் தவிர்கின்றனர். இன்னும் எண்ணிய எண்ணியவாறு எய்திவாழும் பேற்றையும் பெறுகின்றனர். இவர் சீரடியில் இருந்தபோது பல அற்புதங்கள் நிகழ்த்தினார் என்பர். அவர் தங்கியிருந்த மசூதியில் ஒரு நந்தா விளக்கை எரித்து வந்திருக்கிறார். அதற்கு எண்ணெய் எல்லாம் மக்கள் உதவியிருக்கின்றனர்.

ஒரு நாள் எண்ணெய் இல்லாது போக, பக்கத்தில் வைத்திருந்த கூஜாவில் உள்ள தண்ணீரையே ஊற்றி விளக்கை எரித்தார் என்பார்கள். இப்படித் தண்ணீரில் விளக்கு எரித்த அதிசய நிகழ்ச்சியைக் கண்ட ஒரு சிலரே பாபாவைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லியிருக்கின்றனர். அதன் பின்னரே அவரை நாடி வரும் பக்தர்கள் கூட்டம் பெருகியிருக்கிறது. பலபல அதிசயங்கள் நிகழ்த்திருக்கின்றன. இந்த அதிசயங்கள் எல்லாம் அவர் ஜீவியவந்தராக இருந்த காலத்தில் நடந்தவை.

இன்னுமோர் அதிசயம். தமிழ் நாட்டில் பொருள் வளம் மிகுந்த கோயம்புத்தூரில் சில வருஷங்களுக்கு முன்னே அவரது திரு உருவப் படத்தின் முன் நிகழ்ந்திருக்கிறது. அந்த அதிசயம் இதுதான். இருபது வருஷங்களுக்கு முன் சாயிபாபாவின் பெயர் தமிழ் நாட்டில் பிரசித்தமில்லை.

சென்னையில் நரசிம்மசுவாமி என்ற செல்வந்தர் ஒருவர் இருந்திருக்கிறார். அவருடன் திரு AVK. சாரி என்பவரும். இருந்து வந்திருக்கிறார். இருவரும் ஒரு நாள் கோவைக்கு வந்திருந்த போது, கோவையில் திரு. தி. வரத ராஜ ஐயர் என்பவரும் அவரது சகோதரன் C.V. ராஜனும் சாயிபாபா பக்தர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கோவையில் ரத்னசபாபதிபுரம் என்ற புதிய குடியிருப்பில் வடக்கே ஒரு ஏக்கர் நிலம் வாங்கி, அங்கு கிணறு ஒன்று வெட்டி ஒரு பர்ண சாலையும் அமைத்து அதில் சாயிபாபாவின் திரு உருவப்படம் ஒன்றை வைத்து வணங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இன்னும் சிலரும் வந்து வழி பாட்டில் கலந்து கொண்டாடி இருக்கிறார்கள்.

1943ம் வருஷம் ஜனவரி மாதம் 7ந் தேதி வியாழக்கிழமை, இந்த சாயிபாபா சந்நிதியில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. பஜனை ஆரம்பமாவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னே எங்கிருந்தோ ஒரு பெரிய நாகம் ஒன்று ஊர்ந்து வந்தது. சாயிபாபா படத்தை வலம் வந்தது. பின்னர் தன் படத்தை விரித்து ஆட ஆரம்பித்தது. அந்த நாகத்தின் படத்தில் சங்கு சக்கரங்கள் திரிபுண்டரம் முதலிய சின்னங்கள் அழகாக இருந்தன. அந்த நாகம் அப்படி ஆடிக் கொண்டிருந்ததைக் கண்ட ஒரு சில பக்தர்கள் மற்றவர்களுக்கு சொன்னார்கள். ஆணும் பெண்ணும் பிள்ளைகளுமாய் பலர் கூடிவிட்டனர். மலர் கொண்டு வந்து நாகராஜன் பேரிலும் சாயிபாப படத்தின் பேரிலும் அர்ச்சித்தனர்.

அந்த நாகமும் பலமணி நேரம் ஆனந்த பரவச நிலையில் ஆடிக் கொண்டிருந்து விட்டு பின்னர் தன்னை சுற்றியிருந்த மலர்க் குவியல்களிலிருந்து விடுபட்டு எங்கோ சென்று மறைந்துவிட்டது. இந்த அதிசயத்தைக் கண்ட பின்தான், அந்த பர்ணசாலையை ஒரு பெரிய கோயிலாகவே கட்ட வேண்டும், என பக்தர்கள் முனைந்தனர். கட்டியும் முடித்தனர். ஒரு பெரிய படம் ஒன்றையும் எழுதிவைத்தனர். பூசைகளையும் தொடர்ந்து நடத்துகின்றனர். இப்படி உருவானதே கோவை நாகசாயி மந்திர்.

இந்த மந்திரில் இன்று ஒவ்வொரு வியாழக்கிழமையும், ஞாயிற்றுகிழமையும் எண்ணிறந்த பக்தர்கள் கூடுகின்றனர்; வணங்குகின்றனர். பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். அந்தப் பிரார்த்தனைகளும் அப்போதைக்கு அப்போதே நிறைவேற்றி வைக்கவும் பெறுகின்றனர். நான் கடவுள் நம்பிக்கை உடையவன். சைவனாய் பிறந்திருந்தாலும் சிவனிடம் எவ்வளவு பக்தியோ அதில் குறையாத பக்தியே விஷ்ணுவிடத்தும் வைத்திருப்பவன்.

இன்னும் குமரன் எல்லோரையும் தொழுது வணங்கிறவன் தான். நான் எப்படி சாயிபக்தன் ஆனேன் என்பது சில சைவர்கள் ஐயம். எனக்கு வேண்டிய நண்பர் ஒருவர் சாயிபக்தனாக இருந்தார் அவர் ஒரு வியாழக்கிழமை காலை என்னிடம் மாலையில் சாய்பாபா கோயிலுக்கு வாருங்களேன் என்றார்.

எனக்கு அப்போது சாயிபாபாவைப் பற்றி அதிகம் தெரியாததால் அக்கறை காட்டவில்லை. அவர் சொன்னார். சாயிபாபாவை நினைத்துக் கொண்டு ஒரு சிறு பிராத்தனை செய்து கொள்ளுங்கள். இன்று கோயிலுக்கு வாருங்கள் நாளை அது நடக்கும் என்பதற்கு ஓர் அறிகுறி காண்பீர்கள் என்றார். சரி இதை பரீக்ஷை செய்து பார்த்து விடலாமே என்று எண்ணியே அன்று மாலை நண்பருடன் கோயிலுக்குச் சென்றேன்.

அப்போது எனக்கு உத்தியோகத்தில் I.A.S.பதவி வர வேண்டிய காலம். அது எக்காரணத்தினாலோ எதிர்பார்த்த காலத்தில் கிடைக்கவில்லை. நாட்கள் கடந்து போய்க் கொண்டேயிருந்தது. ஆதலால் அன்று கோயிலுக்குப் போனேன். சாயிபாபாவின் படத்தை பார்த்தேன். அவர் ஜீவியவந்தராக இருந்தபோது அவர் கண்கள் தீக்ஷண்யம் பெற்ற இருக்குமாம். அதை எதிர் நோக்கவே மக்களால் இயலாதாம்.

அங்கு சாயிபாபாவின் உருவத்தில் உள்ள கண்களை பார்க்கப்பார்க்க அவை என் இதயத்தையே ஊடுருவுவது போன்ற அனுபவத்தைப் பெற்றேன். அதுவே ஓர் உள்ள நிறைவைத் தந்தது. அதன் பின் எனக்கு IAS பதவி விரைவில் கிடைக்க வேண்டும் என்று உள்ளன்போடு பிரார்த்தித்துக் கொண்டு வீடு திரும்பினேன், மறு நாட்காலை நான் ஆலுவலகத்திற்குச் சென்றால். IAS வரிசையில் சேர்ப்பதற்கு, வேண்டிய தகவல் ஒன்று கேட்டு சென்னை சர்க்காரிட மிருந்து தபால் வந்திருந்தது.

அதற்கு பின் ஆறுமாதம் கழித்தே IAS பதவி வந்தது என்றாலும், அன்று மனதிலே ஒரு தெம்பு பிறந்தது. சாயிபாபா பக்தனாக நானும் மாறினேன். அதன் பின் ஒவ்வொரு குரு வாரமும், தவறினால் ஞாயிற்றுக் கிழமை அன்றும் நாக சாயி மந்திருக்குப்போய் வந்தேன். இன்னும் கஷ்டங்கள் நேர்ந்தால் சாயிபாபாவிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அக்கஷ்டங்கள் தீரவும் பெறுகிறேன்.

எனது உபாசனா மூர்த்தி பிள்ளையார்தான். தஞ்சைப் பெருஉடையாரிடத்திலே, தில்லைச் சிற்றம்பலவனிடத்திலே உள்ள பக்தியை விட திருவேங்கடவனிடத்திலே அழுத்தமான பக்தியும் நம்பிக்கையையுடையவன் தான் என்றாலும் அதே சமயத்தில் சாயிபாபா பக்தனாகவும் வாழ்கிறேன். இதில் எல்லாம் முரண்பாடு ஒன்றும் இல்லை.

ஏதோ மனதுள் பற்றுக் கோடு கொள்வதற்கு ஒரு மூர்த்தம் வேண்டும். அது சாயிபாபாவாக இருக்கிறது. எனக்கு இன்று. "நான் இருக்க பயமேன்“ என்ற தாரகமந்திரம் நம் காதுகளில் ஒலித்து உள்ளத்தில் நிறைந்து விட்டால், நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் என்று உறுதியே பிறந்து விடுகிறது அல்லவா? இப்படி ஒரு கடவுள் நம்பிக்கை வளர்வதற்கு துணை புரிவராக நாகசாயிமந்திர் பாபா என் வாழ்வில் புகுந்திருக்கிறார். அதனால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.