நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/16. மேன்மக்கள்

விக்கிமூலம் இலிருந்து

16. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
(மேன் மக்கள்)

அழகிய வானத்தில் விளங்கி ஒளிவீசும் நிலவும், இளகிய மனமுடைய சான்றோரும் உலகுக்கு ஒளி தருவதில் ஒப்புமை பெறுவர். மாசு மறுவற்றது திங்கள் என்று கூற இயலாது; அதற்குக் களங்கம் உண்டு என்று அதன்கண் துளங்கு இருளால் உலகம் சாற்றுகிறது. அந்தச் சிறுமாசும் தமக்கு ஏற்பட்டால் மேன்மக்கள் தாங்கிக் கொள்ளமாட்டார்கள். தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வர்; செயலாலும் நினைப்பாலும் தீமை கருதமாட்டார்கள். பழி விளைவிக்கும் வழிகளில் விழிகள் நாட்டம் செலுத்தமாட்டார்கள். இவ்வகையில் நிலவைவிட நிறைகுணம் படைத்த சான்றோர் மேன்மை மிக்கவர் ஆவர்.

நல்லது தீயது இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தே ஒரு காரியத்தில் இறங்குவர் மேன் மக்கள்; உள்ளுவது எல்லாம் உயர்வையே நினைப்பர். “காட்டு முயலை வேட்டையாடி அதைப் பிடித்துக் கொண்டு வந்து குறி தப்பவில்லை என்று அறிவித்தால் யாரும் அவனைப் பாராட்டமாட்டார்கள். யானையைக் குறி வைத்து அம்பு எய்து அது தப்பினாலும் அவரைப் பாராட்டுவர்” என்பார் வள்ளுவர்; நரியைக் குறி வைப்பதை விடக் கரியைக் குறி வைப்பதே பெருமை தருவதாகும். கரி என்பது கருப்பு நிறத்தை உடைய யானை; பிறர் தவறுகளைக் கண்டு அறையலாம் போலத் தோன்றலாம்; என்றாலும் அவனை அதற்காக மேன்மக்கள் வருத்த மாட்டார்கள். மற்றவர்கள் அவர்களை இகழக் கூடுமே என்று அவர்களுக்காக இரக்கம் காட்டுவர். பெரியோர் என்பவர் சிறியோர் செய்யும் பிழைகளைப் பொறுப்பது அவர்தம் கடமை ஆகக் கொள்வர். அதுவே அவர்களுக்குப் பெருமை தருவதாகும்.

கரும்பு கடித்தாலும் சுவைக்கும். பிழிந்து பருகினாலும் சுவைக்கும். அதனைச் சாறாகப் பிழிய நூறாகத் துண்டித்தாலும் அது தன் இன்சுவையில் சிறிதும் குறையாது. மேன் மக்களை நீ திட்டு; பேசு, வாட்டு அவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். “அஃது அவன் கருத்து, அதைப் பற்றிக் கவலை கொள்வது தவறு; நமக்கு நாம் உயர்ந்தவர்கள் என்று மதித்துக் கொள்ள உரிமை உண்டு; அந்த மதிப்பீடுகளை அவன் உதைத்துத் தள்ளலாம்; அதற்காக நாம் நம் மனப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்பது இல்லை என்பர். அப்பொழுதும் மேன்மக்கள் எதிரிகளுக்கும் தம்மாலான நன்மைகளைச் செய்து கொண்டேதான் இருப்பர்.

மேன்மக்கள் என்று சொல்லிக் கொள்ள அவர்களிடம் என்ன தகுதிகள் இருக்கின்றன? அவர்களிடம் எதிர்பார்க்கும் நற்பண்புகளை நவில இயலுமா? ‘களவு’ என்பது அவர்களிடம் காண முடியாது; மறைவாகப் பிறர் பொருளைக் கவ்வுதல் என்ற நினைவு தோன்றாது. அகப்பட்டவரையில் சுருட்டிக் கொள்வது என்ற ஆக்கிரமிப்பு அவர்களிடம் இருக்காது. ‘குடி’ அந்தப் பேச்சே அங்கே பேசக்கூடாது; கீழ் மக்கள் தாழ் மதுக்களைப் பருகி மகிழ்வர்; உயர் மட்டம் அவர்களுள்ளும் குடிப்பார் உளர்; கொஞ்சம் பணம் கை வந்து விட்டாலே பான வகைகள் வந்து சேர்ந்துவிடுகின்றன. ‘வசதி இருக்கிறது குடிக்கிறேன்; அதனால் என்ன தவறு’ என்று வினவுவர். கொலு பொம்மைபோல் நிற்பது வாழ்க்கை அன்று; வாழ்க்கை அனுபவிப்பதற்கு என்று சித்தாந்தம் பேசுவர். வெளிநாட்டுச் சரக்கு அவற்றை அவர்கள் உள்ளே இறக்குமதி செய்து பெருமைப்படுத்துகிறார்கள். இவர்கள் பணக்காரர்கள் ஆவர். பண்பாளர் அன்று; மேன்மக்கள் எந்த வகை மயக்கம் தரும் குடி வகைகளையும் தொடமாட்டார்கள். புகை பிடிப்பதையும், வரைவு இல்லாமல் மகளிரை நாடுதல் முதலிய தீய பழக்கங்களையும் அவர்களிடம் காண முடியாது. பிறரை மனமறிந்து எள்ளிப் பேசமாட்டார்கள்; இகழ்ந்து உரைத்தலால் புகழ் அமையாது என்பதை நன்கு அறிவர். எந்த நிலையிலும் வாய் பொய் பேசாது. வாய் என்றாலே வாய்மை என்பதை உணர்ந்தவர். வாய் என்ற பெயரே அது பொய் பேசாது என்பதைக் காட்டுகிறது. வாய்மை ‘பொய்’ பேசாது இது சொல் விளக்கம்; அதற்குப் ‘பொய்’ என்று யாரும் பெயரிடவில்லை. மனம், வாக்கு, செயல் இம்மூன்றிலும் மாசு மறுவற்றவராய்த் திகழ்வர்; நிலை மாறினாலும் தம் உளம் மாறாத உத்தமர்கள் அவர்கள் தம் நிலையில் வாழ்ந்து எதையும் தாங்கும் மன இயல்போடு வாழ்வர். இவை எல்லாம் மேன்மக்களின் நற்குணங்கள்; செயல்கள் ஆகும்.

இதுதான் அறநெறி என்று எடுத்துரைக்கத் தேவை இல்லை; இந்த மூன்று நன்னெறிகளை ஒருவன் பின்பற்றினால் அதுபோதும். அவனை உயர்த்துவதற்கு; இவனை மற்றவர்கள் செவிடன் என்று பேசும் அளவிற்கு மற்றவர்களின் வாழ்க்கையை விமரிச்சிக்கக் கேட்க வேண்டாம்.

பக்கத்து வீட்டுக்காரன் தன் மனைவியைத் தினம் அடித்துத் துன்புறுத்துகிறான்; ‘அடி தடி’ காதில் போட்டுக் கொள்ளாதே. அவனைச் சந்திக்கும்போது கேட்டுவிடாதே. கேட்டால் அவன் என்ன கூறுவான்? “உன் மனைவியை நீ அடித்துக் கொள்; நான் கேட்கவில்லை” என்பான். “அவள் என் உடைமை; அவளை அடிப்பதற்கு எனக்கு அதில் ஒரு மகிழ்ச்சி, உன்னை அடித்தால் வந்து கேள்” என்பான்; கல்லை அறைவானேன் கைநோவு என்று கூறுவானேன். மற்றான் மனைவி அவளை உற்றுப் பார்ப்பதைத் தவிர்க. இந்த வகையில் நீ குருடனாய்ச் செயல்படுக; அவளைப் பார்த்தால் என்ன பயன்? அவள் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிடுவாள். “எதிர் வீட்டுக்காரர் நான் சேலை அழகாகக் கட்டிச் சென்றால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; உறுத்து உறுத்துப் பார்க்கிறார்” என்று தன் கணவனிடம் முறையிடுவாள். அவன் உடனே ரோஷம் பொத்துக் கொண்டு வெளியே வந்துவிடுவான். “என் மனைவியை நீ ஏன் முறைத்துப் பார்த்தாய்?” என்று கேட்டான். “அழகாக இருக்கிறாள்; அதனால் அவள் என்னைக் கவர்ந்தாள்” என்றால் அவன் கேட்பானா? பக்கத்து வீட்டுக்காரி எப்படி இருந்தால் உனக்கு என்ன? குருடாக இருந்துவிடு; பிரச்சனையே வராது; உன் வீட்டுக்காரியும் சும்மா இருக்க மாட்டாள். “என்னைவிட அவள் எந்த வகையில் அழகு?” என்று வினாத் தொடுப்பாள். இதற்கெல்லாம் விடை தேடிக் கொண்டிருக்க முடியாது. மற்றொன்று புறங்கூறிப் பொய்த்து நகை செய்யாதே. நண்பன் இருக்கும்போது நகைபடப் பேசிவிட்டு அவன் சற்று மறைந்ததும் அவன் குறைகளை மிகைபடப் பேசுவது இழிவு ஆகும். அதைவிட நாக்கைப் பிடுங்கிக் கொண்டு யாக்கையை விட்டு விடலாம். வாழவே தேவை இல்லை. புறங்கூறுவது கெட்ட பழக்கம். அதனால் அந்த வகையில் ஊமையாகச் செயல்படுக; மற்றவர்கள் வாயைக் கிளறுவார்கள்; நீ ஏதாவது உளறுவாய். ஐம்புலன்களை இறைவன் அளித்தாலும் சிலவற்றைச் செயல்படாமல் வைத்துக் கொள்வது நல்லது; செவி, நாக்கு, வாய் இந்த மூன்றும் ஒலிக்கருவிகள்; இவற்றைக் கட்டுப்படுத்து; இரைச்சல் செய்யாமல் பார்த்துக் கொள்; இனிமையான பண்ணிசை கூட்டு; இந்த இழி இசை தள்ளிவிடு; இதுவே உயர்வதற்கு வழியாகும்.

சிலபேரைச் சில நேரம் மட்டும் பார்த்தால் போதும்; அடிக்கடி வந்தால் அவன் ஏதோ உதவிக்கு வருகிறான் என்று இகழ்ந்து பார்ப்பார். மேலோர் எத்தனை முறை சென்றாலும் முகம் இனிக்க வைத்து அகம் நகைக்க வைத்து உறவாடுவார். அவர்களைப் பார்த்து அணுகுதல் செய்க; மதியாதார் வாசல் மிதிக்கவேண்டாம் என்பது தொல் மொழி; அதை மதித்து நடந்து கொள்க.

கோடிக் கணக்கில் பணம் குவித்துவிட்டான்; அவனை அடைந்தால் கேடு இல்லை என்று கருதலாம். அவன் சமூக விரோதி, பிறர் அடைய வேண்டிய பொருளை ஒருவனே குவிக்கிறான். அவன் மனம் உவந்து பிறர்க்கு எந்த உதவியும் செய்யமாட்டான். வசதி உடையவன் என்பதால் உன் அசதிகளை அகற்றுவான் என்று கருதிவிடாதே.

சான்றோர் உறவு அத்தகையது அன்று; உடனே கேட்ட அந்த அளவே விரும்பியது கிடைக்ககும் என்று கூற முடியாது. அது தங்கச் சுரங்கம்; உள்ளே பொதிந்து கிடக்கின்றன. நிரந்தரமாக நன்மை செய்வர். அவர்கள் நன்மைகள் கண்ணுக்குப் புலப்படா; ஆனால் தொடர்ந்து துயர் தீர்ப்பர்; மேன்மக்கள் தொடர்பு நிலைத்தது; தொடர்ந்து உதவுவது; பயன் உடையது நம்பியவரை அவர்கள் என்றும் கைவிடமாட்டார்கள்.