பக்கம்:அணியும் மணியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

3. இரண்டு காட்சிகள்


சிலம்பைச் சுற்றியெழும் சிலப்பதிகாரக் கதையில் இளங்கோவடிகளின் கதையமைக்கும் ஆற்றலும், நிகழ்ச்சிகளைப் பொருத்தும் திறனும், காட்சிகளை அமைத்துக் காட்டும் கவினும் போற்றத்தக்கனவாய் அமைந்துள்ளன. சிறப்பாக ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இரண்டு காட்சிகளாக அமைத்துக் காட்டும் அழகு சிலப்பதிகாரத்தில் பலவிடங்களில் அமைந்துள்ளது. உவகையில் அவலத்தையும், கொடுமையில் செம்மையையும், காதலில் கலக்கத்தையும், ஒன்றனோடு ஒன்றைப் பொறுத்திக்காட்டி விளக்கும் திறன் இவர்பால் அமைந்துள்ளது.

கண்ணகி மாதவி இருவரையும் படைத்து, அவர்கள் பண்பை வெளிப்படுத்தும் வகையில் கோவலனின் வாழ்வை அவர்களோடு பிணைத்து, அவ்வப்பொழுது இருவரின் இருவேறு நிலைகளையும் ஒருங்குவைத்துக் காட்டும் அமைப்பைப் பலவிடங்களிற் காண்கிறோம்.

ஆடல், பாடல், அழகு இம்மூன்றும் கூடிய மாதவியின்பால் விருப்புற்றுக் கோவலன் அவளோடு உறைந்து வாழ்கின்றான் என்ற செய்தியைச் சொல்லவந்த விடத்தில் கண்ணகியின் இல்லத்தினை மறந்துவிடுகிற செய்தியையும் உடன் சேர்த்தே கூறுகின்றார்.