இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
133
செந்தணலின் வெம்மையிலே சேர்த்துச் சுட்டால்
செம்பொன்னும் கரித்துண்டாய் மாறிப் போமோ?
வெந்துயரம் தந்திடுமோர் சிறைவாழ் வாலே
வீரமிகு நெஞ்சந்தான் சோரம் போமோ?
எந்தவித ஆதிக்கம் சீறிப் பாய்ந்தும்,
எத்தனையோ கொடுமைகளை அடுக்கி னாலும்,
இந்திமட்டும் ஆட்சிமொழி என்ற கொள்கை
எந்நாளும் தென்னாட்டார் ஏற்றல் ஆமோ?
'குடியரசுத் திருநாளில் இந்தி தேவி
கொலு விருப்பாள் அரியணையில்' என்று கூறி...
முடியரசுக் காலத்தும் காணா வண்ணம்
முடுக்கிவிட்டார் அடக்குமுறை, அறுபத் தய்ந்தில்:
இடியரசா? தடியரசா? இரத்தச் சேற்றில்
இந்நாட்டு வரலாற்றை நனைத்துத் தோய்க்கும்
வெடியரசா? காட்டரசா? என்று மக்கள்
வெதும்பிமனம் உடைந்தார்கள்! விழிப்பும் பெற்றார்