பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


நாங்கள் மேற்கூறப்பட்ட எந்தவிதமான சடங்குகளையும் செய்வதில்லை, செய்யத்தேவை இல்லையென்றும் கூறுகிறோம். அத்தகைய சடங்குகளைச் செய்வதற்கு எந்தவிதமான அர்த்தமுமில்லை. அதற்குக் கூறப்படும் காரணங்களும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஆகவேதான் அவைகளை நாங்கள் செய்வதில்லையென்பதுடன், செய்வதும் கூடாது எனவும் குறிப்பிடுகிறோம்.

இந்தச் சடங்குகளை நாம் ஏன் செய்யவேண்டும்? அவைகளை விட்டுவிட்டால் என்ன? என்ற கேள்விக்கு அவைகள் அந்தக் காலத்திலிருந்து இருந்துவரும் பழக்கங்களாயிற்றே! அவைகளை எப்படி விட்டுவிட முடியும்? என்ற முறையில்தானே பதில் கிடைக்கிறது. வேறு ஏதாவது தக்க காரணங்கள், பொருத்தமான பதில்கள், அர்த்தமுள்ள அறிவுக்குப் பொருத்தமான விளக்கங்கள் தரப்படுகின்றனவா? கிடையாதே!

ஏதோ சில காரியங்களைச் சடங்குகள் என்றும் சாஸ்திர முறைகள் என்றும் பழைய வழக்கங்கள் என்பதற்காக மட்டும், எந்தவிதமான காரணங்களுமின்றி நம்மையறியாமலேயே நாம் செய்து வருகிறோம். இவைகளைத்தான் நாம் சரியா? தேவைதானா? என்று சீர்தூக்கிப் பார்த்து முடிவு கட்டவேண்டும்!

மக்கள் தமது அன்றாட வாழ்வில் எத்தனையோ காரியங்களைச் செய்கிறார்கள். செய்கின்ற அத்தனை காரியங்களுக்குமா காரண காரியங்களையும் பொருத்தத்தையும் எண்ணிப் பார்த்துச் செய்து கொண்டிருக்கிறார்கள்! இல்லை அப்படிச் செய்வதில்லை.

எத்தனையோ காரியங்களை ஏன் செய்கிறோம்! என்ன அர்த்தம். எப்படிப் பொருத்தம் என்றெல்லாம் பார்த்துக்