2.கேகயன் மடந்தை
கம்பன் கட்டிய கலைக் கோவிலில் ஓர் இன்றியமையாத பாத்திரமாவாள் கைகேயி. அவளாலேதான் இராம காதை நடைபெறுகிறது. இராமன் உலகில் தோன்றிய பயன் விளைய, அவள் ஒருத்தியே காரணமாகிறாள்.
தேவர் துயரைப்போக்குவதற்காக இராமபிரான் தோன்றியது மட்டும் போதாது. அவன் நாடிழந்து காடு நோக்கிச் சென்றிராவிடின், அவன் அவதாரத்தால் யாதொரு பயனும் விளைந்திராதன்றோ?
கவிஞன் முறை
இவ்வளவு நன்மை செய்த ஒருத்தியைக் கெட்டவள் என்று எவ்வாறு கூறுவது? என்றாலும், உலகம் அவளைக் கெட்டவள் என் றும் பழி சூடியவள் என்றுந்தான் கூறுகிறது. உண்மையில் கைகேயி தீயவளா? காப்பியம் செய்த கவிஞனுக்கும் இக்கேள்வி பெரிய இடர்ப்பாட்டைத்தான் விளைவித்துள்ளது போலும்! ஒரு காப்பிய ஆசிரியனுக்கு இரண்டு வகைக் கடமைகள் உண்டு. ஒன்று, அவன் படைக்கும் பாத்திரங்களின் பண்பை அவனே விளக்குவது. இதில் அப்பாத்திரத்தைப்பற்றி அவன் என்ன கருதுகிறானோ, அக்கருத்தே இடம் பெறும். மற்றொரு வகையில் அவனுக்கு ஒன்றும் வேலை இல்லை. அவனால், படைக்கப்பட்ட ஏனைய பாத்திரங்கள் தம்முள் பேசுகின்றன. அங்ஙனம் பேசுகையில் ஒவ்வொரு பாத்திரம் பற்றியும் பேச நேரிடுகிறது. இவ்வகைப் பேச்சுக்களில் ஒரு பாத்திரத்தைத் தீயதென்றோ நல்லதென்றோ கூற நேரிடும். இவ்வாறு ஒரு பாத்திரம் பிறிதொரு பாத்திரத்தைத் தீயதென்று கூறிய காரணத்தால் மட்டும்