40
“எனக்குத் தேனாம்பேட்டையிலே ஒரு நண்பர். அவர்தான் இத்தனை விவரங்களையும் எனக்குச் சொன்னார்.”
“அவர் பெயர்?”
“அவர் பேர் எஸ்.பி. சிதம்பரம்!”
“ஓகோ?”
“ஊம்!”
“சரி; இனி, நீங்கள் கீழே போகலாம்!”
“ஆகட்டுங்கம்மா!”
நகர எத்தனம் செய்தவர் நேர்முகமாகத் திரும்பி நின்றார்; நேர்முக உதவியாளர் அல்லவா? “இன்னிக்கு மதியம் வந்தது இந்த உறை” என்று கூறி, வந்திருந்த தபாலை அமெரிக்கையாக நீட்டினார். “யாரோ ஓர் ஆள் ஏதோ ஒரு வண்டியிலே கொண்டாந்து டெலிவரி செஞ்சுட்டுப் போனாருங்க. கையெழுத்துப் போட்டு வாங்கிக்கிணேனுங்கம்மா!” என்றார்.
கடிதத்தை நிதானத்தோடுதான் வாங்கினாள், அவள். ஆனாலும், அது நிதானம் தவறி வீழ்ந்தது, விடவில்லை. மடக்கிப் பிடித்து எடுத்துக் கொண்டாள்.
உறையை முன்னும் பின்னும் புரட்டியெடுத்தாள். அனுப்பியது யாராம்?-மூச்! ஒரு துப்பும் துலங்கவில்லை.
ஒட்டப்பட்டிருந்த ஓரத்தைக் கணித்துப் பிரித்தாள். கனகச்சிதமாகவே பிரிந்து விட்டது.
“அன்புடையீர்,
நலம்தானே?
விளம்பரம் கண்டேன்.
கலியாண சுயம்வரம் விளம்பரத்தைத்தான் சொல்லுகிறேன்.
போட்டியில், அடியேனும் கலந்து கொள்ள உத்தேசம்.