பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்



‘தினகரன்’ நாளேடு, முழுக்க முழுக்க திராவிடரியக்கக் கொள்கை வளர்ச்சிக்கான ஏணியாக இருந்து வருகிறது. எப்போதிலிருந்து? 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு! எனவே, தினகரன் தின ஏட்டின் தொண்டு சாதாரணமானதன்று. தி.மு. கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை எந்த ஒரு தனிப்பட்ட பத்திரிகையும் ‘தினகரன்’ அளவுக்கு நன்றி விசுவாசத்துடன் தொண்டாற்றி யதில்லை.

பி.எஸ். இளங்கோ என்ற தி.மு.கழகத்தவர் ‘மாலைமணி’ என்ற நாளேட்டை நடத்தினார். அந்த ஏட்டில் ‘எரியீட்டி’ என்று வெளிவந்த கட்டுரைகள், காலையில் வரும் அரசியல் பகைக்கு மாலையிலோ, மறுநாளோ பதிலெழுதும் பழக்கம் இருந்தது. அந்தப் பழக்கம் வழக்கமானதும், கட்சி வளர்ச்சிக்கு அந்தக் கட்டுரைகள் பகைக்கு எரி நெருப்பாகிக் கட்சி வாசகர்கள் உள்ளத்தைக் கொதிக்க வைத்தன. அதனால், கட்சி வளர்ந்தது. தொண்டர்கள் உணர்ச்சிகளின் உருவங்களாக கட்சி அரசியலுக்குள் உழைத்தார்கள்.

அதனைப் போலவே, தினகரன் பத்திரிகையின் இரண்டாம் பக்கத்தில் எழுதப்படும் செய்திக் கட்டுரைகள், சட்ட விளக்கங்கள் அரசியல் வித்தக மற்றவர்களுக்கு அறிவுரையாக அமைந்தது ஒருபுறமிருக்க, மறுபுறம் உண்மையான கழகத் தொண்டர்களை ஊக்குவிக்கும் ஊற்றுக் கண்ணின் உண்ணீராகவே வேட்கை தீர்த்து வருகின்றது எனலாம்.

ஜே.பி.ஆர்

நீதியின் குரல்

திராவிடரியக்க முழுநேரத் தொண்டராக, அறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., வி.என். ஜானகி எம்.ஜி.ஆர். காலம் வரை உழைத்த ஜே.பி.ஆர். என்ற திராவிடரியக்க மாவீரர், இன்று கல்வியாளராக, வழக்குரைஞராக, கல்விக் கல்லூரிக் கோட்டங்களை நடத்தும் முதல்வராக உள்ளார் என்றால், இது திராவிடர் இயக்கத்துக்குக் கிடைத்த பெரும்பேறு அல்லவா?

சென்னை வால்டாக்ஸ் சாலையிலே இருந்த ஒற்றை வாடை நாடகக் கலையரங்கத்தில், 1962-ஆம் ஆண்டு வாக்கில்,