உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 35

 “எங்க அண்ணனுக்கு நான் எழுதக்கூடாதா? நீங்க கர்நாடகம்.”

“இப்போ நான் சொல்றது ஒனக்குப் புரியாது. ஒனக்கும் சந்திரனுக்கும் கல்யாணமாகி, நீ பிரசவத்துக்கு அரக்கோணம் வரும்போது, புருஷனுக்கு லட்டர் எழுதுவே. அப்போ நான் ‘என் தம்பிதானே? நானும் ரெண்டு வரி எழுதறேன்னு’ சொல்லும்போதுதான் என் சங்கடம் ஒனக்குப் புரியம்.”

பாமா, தனக்குத் திருமணமாகி, கர்ப்பமும் தரித்துவிட்டதுபோல் நாணினாள். பிறகு அண்ணியிடம் மேற்கொண்டும் ரசனையான வார்த்தைகளை எதிர்பார்ப்பவள்போல் அங்கேயே நின்றாள்.

ஆனால் மணிமேகலையோ திடீரென்று எழுந்து, சுவரில் மாட்டப்பட்டிருந்த காலண்டரை உற்றுப் பார்த்து விட்டு, “ஆல் ரைட்! இன்னும் ஒரு மணி நேரத்துல ராகு காலம் வரப்போவுது. நான் பெரியவங்களோட, ஒரு சுபகாரியத்தைப் பற்றிப் பேசனும்...இந்தா இந்த லட்டரை போட்டுட்டு தோப்புல போய் உட்காரு” என்றாள்.

மணிமேகலை கொடுத்த கடிதத்தை பாமா வாங்கிக் கொண்டாள். தானும் ஏன் சந்திரனுக்கு இப்பவே ஒரு கடிதம் எழுதக்கூடாது என்ற சிந்தனையுடன், அவள் முதலில் நாணிக்கொண்டும் பிறகு துள்ளிக்கொண்டும் வெளியேறினாள்.

மணிமேகலை உள்ளே போனாள். அண்ணன்காரன் ஒரு பட்டுப் பாயில் உட்கார்ந்திருந்தான். அண்ணிக்காரி சமையலறை வேலையை முடித்துவிட்டு, ‘அப்பாடா’ என்று சொல்லிக்கொண்டே, கர்ப்பிணி வயிற்றை லேசாகத் தடவிக்கொண்டே உட்கார்ந்தாள். அப்பாக்காரர், பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.