பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

மயக்க மருந்து

மரம், செடி கொடிகள் இல்லாத பாறைப் பகுதிகளில் வளமான மண் இருப்பதில்லை. சிறு சிறு கற்களால் நிரம்பியுள்ள இப்பகுதி 'சரளை நிலம்’ என அழைக்கப்படும். இந் நிலத்தில் மழை நீரும் தங்குவதில்லை. கடினமான இப்பகுதியில் தாவரங்களும் முளைப்பதில்லை.

மணல் பகுதிகளில் தாவரங்கள் தேவையான நீரைப் பெற முடிவதில்லை. தாவரங்களின் வேர்கள் இறுக்கமான பிடிப்பைப் பெற முடிவதில்லை. எனவே, இதுவும் விளைச்சலுக்கு ஏற்ற மண்ணாக அமைவதில்லை. இன்னும் சில இடங்களில் களிமண் பூமியாக அமைந்திருக்கும் களிமண்ணில் மண் இறுக்கம் அதிகமாக இருப்பதால் நீரோ, காற்றோ மண்ணுக்குள் புக முடிவதில்லை. தண்ணீர் உறிஞ்சப்படாததால் மேலேயே தேங்கி நிற்க நேர்கின்றது. எனவே, எளிதில் வேர் இறங்காத இம்மண்ணும் விளைச்சலுக்கு உகந்ததாக இருப்பதில்லை.

விளைச்சலுக்கு ஏற்ற மண்ணாகக் கருதப்படுவது வண்டல் மண் (Loam) ஆகும். இஃது மூன்று பங்கு மணலும் இரண்டு பங்கு களிமண்ணும் கலந்ததாகும். அத்துடன் மக்கிய தாவரங்களும் விலங்குக் கழிவுகளும் இம்மண்ணை மேலும் வளமுடையதாக ஆக்குகின்றன. இதனால், இறுக்கம் குறைந்த ஒரளவு பொலபொலப்புடன் இருக்கும் இம் மண்ணுள் நீர் இறங்கித் தங்குவதும் காற்று புகுவதும் எளிதாகும். இதனால் மண்ணுள் வேர்கள் நன்கு பரவி, நிலைபெற்று, வேண்டிய உணவைப் பெற முடிவதால் தாவர வளர்ச்சி செழிப்பாக அமைகிறது.

கருநிறமுடைய மண் கரிசல் மண்ணாகும். இதில் மணல் குறைவாக இருந்தாலும் வண்டலும் களிமண்ணும் சற்று மிகுதியாக இருக்கும். இத்தகைய மண்பகுதி பருத்தி விளைச்சலுக்கு மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

தடித்த தாவர, விலங்குகளை நன்கு மக்கச் செய்து வளமுடையதாக மண்ணை ஆக்குவதில் பாக்டீரியாக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அதே போன்று மண் புழுக்களும் மண்ணைக் குடைந்து கொண்டிருப்பதால் அக்குடைவுத் துளைகளின் வழியே காற்றும் நீரும் வேர்களைச் சென்றடைய ஏதுவாகிறது. எனவே தான். மண்புழுக்களை 'உழவனின் தோழன்’ என்று அழைக்கிறோம்.

சாதாரணமாக மண் அடுக்குகளை மூன்று வகையாகப் பகுப்பர். தாவரங்கள் வளர்கின்ற பகுதிக்கு அடியிலுள்ள மண், மேல் மண் (Top soil) ஆகும். இதுவே சத்துள்ள மண் பகுதியாகும். அதற்குக் கீழாக உள்ள மண் அடி மண் (Sub soil). இஃது கற்களையும் பாறைத் துண்டுகளையும் கொண்ட சரளை மண் பகுதியாகும். அதற்கும் கீழாக உள்ள பகுதி அடி நிலைப்பாறை (Bed rock) ஆகும். இவ்வடுக்குகளை எங்கும் உள்ள மண்ணில் காணலாம்.

இக்கால அறிவியல் வளர்ச்சியின் விளைவாக மண்ணுக்கு வளமூட்ட செயற்கையான இராசாயன உரங்கள் தயாரிக்கப்பட்டு, பயன் படுத்தப்படுகின்றன.


மயக்க மருந்து : மருத்துவத் துறையில் மயக்க மருந்து ஒரு இன்றியமையாப் பங்கை வகிக்கிறது. குறிப்பாக, அறுவை மருத்துவத்தின்போது பெரும்பாலும் மயக்க மருந்து கொடுத்தே அறுவை சிகிச்சை செய்கின்றனர். ‘அனஸ்தெட்டிக்ஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இம்மயக்க மருந்து வாயுவாகவோ திரவப் பொருளாக ஊசி மூலம் செலுத்தியோ மருத்துவம் செய்கின்றனர். மருத்துவத் துறையில் மயக்க மருந்து கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் சாதனையாகும்.

பெரும் அளவிலான அறுவை மருத்துவம் நீண்ட நேரம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்போது உடல் முழுமையும் உணர்ச்சி இழக்கச் செய்யும் வகையில் மயக்கமுறச் செய்து அறுவை சிகிச்சை செய்வர். சிலசமயம் இடுப்புக்குக் கீழாக அறுவை சிகிச்சை செய்ய இடுப்பில் தண்டுவடப் பகுதியில் ஊசி மூலம் மயக்க மருந்தைச் செலுத்தி மரத்துப் போகச் செய்வர். சிலசமயம் உடல் உறுப்புகளில் சிறு சிறு அறுவை சிகிச்சை செய்ய, அந்தந்த உறுப்புப் பகுதிகளில் மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் போதும், சான்றாக, பல் அல்லது விரல்களில் அறுவை செய்ய அப்பகுதியில் மட்டும் மயக்க மருந்தைச் செலுத்தி, உணர்ச்சியைப் போக்கி அறுவை சிகிச்சை செய்வர். இம்முறையில் சில மணித்துளிகள் மட்டுமே மரத்துப் போகச் செய்யமுடியும்.

மயக்கமூட்டவும் மரத்துப் போகச் செய்யவும் பலவித வாயு, திரவ மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றுள் குளோரோபாரம், ஈதர், கொக்கெயின், நைட்ரஸ் ஆக்சைட்