148
ஈச்சம்பாய்
சொன்னியே... ஞாபகம் இருக்கா? நீ காலையில நாலு மணிக்கெல்லாம்... வண்டி பூட்டினு பூட்டியே, ஞாபகம் இருக்கா? இந்தக் கொயந்த...!"
கூட்டத்தில் பெண்கள், காதுகளைப் பொத்திக்கொண்ட போது, ஆண்கள் பற்களைக் கடித்தார்கள். கன்னய்யாவைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.
கன்னய்யாவும் ஞாபகப்படுத்திப் பார்த்தான். அவள் சொல்லும் தடயங்கள், நெஞ்சில் பாரவண்டிச் சக்கரம் பதிவது போல் தடங்களை ஏற்படுத்தின.
கூட்டத்தில், அவன் மீது அனுதாபத்துடன் உபதேசங்கள் விழுந்தன. "அடுத்தவன் பிள்ளை ஒனக்கு வாண்டாப்பா."
"வெட்கங்கெட்ட மூதேவி பேசுறத பாரு- நீ போப்பா.. ஏதோ ஒன் போதாத காலம். இவள் நாயை விடக் கேவலமாப் போகப் போறாள் பாரு."
கன்னய்யா, நெஞ்சமே கண்ணாம்புக் கால்வாயாக, நெற்றி நரம்புகள், முன்னும் பின்னுமாகத் பின்னிக்கொள்ள, கூட்டத்தைப் பரிதாபமாகப் பார்த்தான். பிறகு கால்களைக் கட்டியபடியே, அதன் இடுக்கில் முகம்போட்டுக் கிடந்த சிறுவனின் கரத்தை விலக்கி, சபையின் முன்னால் நிறுத்தி விட்டு மெல்ல நகரப் போனான்.
அதற்குள் அந்தச் சிறுவன் அவன் பின்னால் ஓடினான். கழன்ற நிஜாரை கழட்டிப் போட்டுவிட்டு, கன்னய்யாவின் கையைப் பிடித்து கொண்டு, அதைத் தன் முதுகோடு சேர்த்து இணைத்துக் கொண்டு, விறைப்பாக நின்றான்.
கன்னய்யா அந்தச் சிறுவனையே பார்த்தான்.