பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணாரக் காணும் காட்சி

51

மூன்று நிலை

இறைவனைத் தியானிப்பதில் மூன்று வகையான நிலை உண்டு. முதலாவது, இறைவனுடைய திருவுருவத்தைக் கோயிலில் காணும்போதே மனத்திலும் பதிவு கொள்ளும்படி காண்பது. அப்பொழுது கண்ணை மூடிக்கொண்டும் திறந்து கொண்டும் பார்ப்பதனால் இது சாத்தியமாகிறது. இது முதல் நிலை. அடுத்தது, கண்ணுக்கு முன்னால் எம் பெருமானின் திருக்கோலம் இல்லாதபோதும், கோயிலுக்குப் புறம்பே நெடுந்தூரத்தில் இருக்கும்போதும் கோயிலில் கண்ட திருவுருவத்தை அகக் கண்ணில் கண்டு நிற்பது. புறத்தில் முன்பு கண்ட திருவுருவமே இப்போது ஒளிபெற்று அகத்தில் தோற்றும். இது இரண்டாவது நிலை. பின்பு அகத்திலே கண்ட அந்த ஒளி மயமான திருக்கோலத்தை எங்கே நினைத்தாலும் அங்கே புறவெளியில் காண்பது. உள்ளத்தில் காணுகின்ற காட்சியே இப்போது புறத்திலும் தோன்றும். இது மூன்றாவது நிலை. இதைச் சொல்கிறார் அருணகிரிநாதர்.

செங்கேழ் அடுத்த சினவடி வேலும் திருமுகமும்
பங்கே நிரைத்தநல் பன்னிரு தோளும் பதுமமலர்
கொங்கே தரளம் சொரியும்செங் கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கேஎன் முன்வந்து எதிர்நிற்பனே.

"எங்கே நினைத்தாலும் அவன் என் முன்னால் வந்து நிற்பான்" என்கிறார். முதல் பாட்டில் கூறிய அநுபவம்,

"என் உள்ளம் குளிரக் குதிகொண்டவே"

என்பது. அது உள்ளத்தில் தோன்றிய காட்சி.

எங்கே நினைப்பினும் அங்கோன் முன்வந்து
எதிர் நிற்பனே

என்பது புறத்தில் தோன்றிய காட்சி.