சி. என். அண்ணாதுரை
93
கெயஸ், ரோம் நகரில் இல்லை, இவனது தவறான பேச்சுகளை, மறுத்துரைக்க. எனவே, ட்ரூசஸ் சண்டப்பிரசண்டனானான். புல்வியஸ் எனும் நண்பன், கெயசின் ஏற்பாட் டின்படி, செல்வர்களின் நிலங்களை அளவெடுத்து ஏழைகளுக்காக்கும் காரியத்தைச் செய்துவந்தான். அவன் மீது பழி சுமத்தி வழக்குத் தொடுத்தான், வஞ்சக ட்ரூசஸ்.
இரண்டு திங்களுக்குப் பிறகு ஊர் திரும்பிய கெயஸ், தன்னை வீழ்த்த வெட்டப்பட்டிருக்கும் நச்சுப் பொய்கையைக் கண்டான்; மக்களை அழைத்தான், தன் புதுத் திட்டங்களுக்கு ஒப்பம் அளிப்பதற்காக. ரோம் நகருக்கு வெளியே இருந்தும் ஏராளமான மக்கள் வந்தனர்; செனட் அவர்களை உடனே சென்று விடுமாறு கட்டளையிட்டது. அதை கவனிக்கவேண்டாம். நானிருக்கிறேன் அஞ்சாதீர்கள், என்று கூறினான் கெயஸ். ஆனால் செனட் சபை, காலிகளை ஏவி, வெளியூர்க்காரர்களைத் தாக்கித் துரத்திற்று.
கெயஸ் கிரேக்கசின் ஆற்றல் இவ்வளவுதான்! என்று கைகொட்டிச் சிரித்து, கலகமூட்டும் பேர்வழிகள், மக்கள் மனதைக் கலைத்தனர். செல்வர்கள், கெயஸ் மீண்டும் 'காப்பாளர்' பதவிபெற முடியாதபடி, தில்லுமல்லுச் செய்தனர்; வென்றனர்.
ஆப்டிமஸ் என்பான், கான்சல் பதவியில் அமர்ந்தான்--அவன் சீமான்களின் நண்பன், எனவே, அவன் கெயஸ் கிரேக்கஸ் புகுத்திய சட்டங்களை ரத்து செய்ய முனைந்தான்.
அரும்பாடுபட்டுக் கட்டிய அறநெறியை அக்ரமக்காரன் அழிக்கக் கிளம்பினான். அதனைத் தடுத்திடும் 'காப்பாளர்' இல்லை, இரவு பகலாகச் சிந்தித்துச் சிந்தித்துச் சித்தரித்த ஓவியத்தை அழிக்கிறான். ஏழையரின் எதிர் காலத்தைச் சிதைக்கிறான், புரட்சியில் பூத்தமலரைக் கசக்கிப் போடுகிறான், தடுத்து நிறுத்தும் ஆற்றல் இல்லை. கெயஸ்