அறம் பொருள் இன்பம் என்ற மூன்றன் இயய்பினை உள்ளவாறு உணர்ந்து அவற்றிற்குரிய மதிப்பளிக்கும் உள்ளம் உடைய ஓர் உயர்குலப் பெண், கார் காலத்து மாலைப் பொழுதில் தலைவாயிற்கண் யாருடைய வருகையையோ ஆவலோடு எதிர் நோக்கிக் கால் கடுக்க நின்று கொண்டிருந்தாள்.
அவள் கணவன் பெருவணிகர் குடியில் வந்தவன்; அதனால் விழுநிதி ஈட்டும் விருப்பம், அவன் உள்ளத்தில் இயல்பாக ஊறிக் கிடந்தது என்றாலும், அவன், அப்பொருளொன்றே வாழ்வுத் துணையாகும், அது ஒன்றைப் பெறுவதினாலேயே தன் வாழ்வு நிறைவாகி விடும் எனக் கருதும் குறுகிய உள்ளம் உடையவனல்லன். பொருளிட்ட வேண்டும் என்றாலும், அதை அறவழியிலேயே ஈட்ட வேண்டும் என்றாலும், ஈட்டிய பின்னர் அப்பொருட் பயனாம் இன்பத்தைக் குறைவற நுகர்தல் வேண்டும் என்ற விரிந்த உள்ளமும் அவனுக்கு உண்டு. அவன் பால் அப்பண்பு குறைவறக் குடி கொண்டிருப்பதைக் கண்டே அவள் அவனை மணம் செய்து கொண்டாள். இருவரும் இணை பிரியாதிருந்து இன்புற்று வாழ்ந்தனர்,
ஒருநாள் எப்போதும் இன்ப நாட்டத்திலேயே இருந்து விடுதல் கூடாது. அவ்வின்பம் இடையற்றுப் போகா வண்ணம் துணை புரிவதாய பொருளையும் ஈட்ட