பக்கம்:எழில் விருத்தம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம்

17

மாலையைக் காட்டும் கவிஞரின் திறனுக்கும் பொன் மாலை சூட்டத் தமிழறிந்த முன்னாள் தமிழறிஞன் இல்லையே என்ற ஏக்கந்தான் ஏற்படுகின்றது!

'சேவலின்' கொண்டையைக் குறிக்கும் கவிஞர் கொள்ளி நுனி எரி தீயையும், கொம்பிடைப் பூத்த செம்பூவையும் ஒப்பிடுகிறார். அதன் விரல்கள் மஞ்சள் கிழங்கினையும், விரலிடைக் காணும் முள்நாணல் முளையினை நறுக்கிய துண்டினையும் ஒத்திருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

உற்று நோக்கி ஒரு பொருளை உவமையாகக் காட்டும் திறன் சங்க இலக்கியப் புலவர்களின் புலமையை நினைவூட்டுவதாயிருக்கிறது.

'தன் முன் புறமுதுகிட்ட சேவலைத் தாக்குமோ சேவல்!' என்று கவிஞர் நம்மைக் கேட்கின்றார். இதனால் சேவற் போரினை எவ்வளவு உன்னிப்பாகக் கவிஞர் பார்த்திருக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. அடுத்தது 'சோலை’

அதனுள் நுழையும் போதே குளிர்மை தோன்றுகிறது. சோலைப் புதுப்பெண்ணைக் காண்பதற்காக மாமலைவிட்டு மாலைக் கதிரொளி மங்கும் வேளையில், மாமணத் தென்றலாகிய தலைவன் வருவதைக் காணும்போது, உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளுநடை போடுகின்றது.