பக்கம்:எழில் விருத்தம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 எழில் விருத்தம்

35

கற்றுணர்ந்த நல்லமைச்சைக்
    கவிபாடும் மேலோரைக்
         கணித நூலைப்
பெற்றிருந்த முடிமன்னர்
    பெரு வாழ்வை அரசியலைப்
         பேணிக் காத்த
சுற்றுமதிற் பெருங்கோட்டை
    நிலையெல்லாம் தொகைநூல்கள்
         சொல்லும்; மக்கள்
கொற்றமிலாக் குறையாலோ
    நாட்டகத்துக் கோட்டைச்சீர்
         குறைந்த தந்தோ!.................................... 8

சிலைசுற்றித் தமிழ்காத்துத்
    திசையெட்டும் புகழ்நாட்டத்
         திண்டோள் வீரர்
அலைசுற்றும் கடலாண்ட
    பழம்பெருமை நூலகத்தே
        அறிந்து கொண்டு
மலைசுற்றும் படியேறித்
    தலைசுற்றி மலையுச்சி
        மன்னர் கோட்டை
நிலைசுற்றிப் பார்க்கையிலே
    தாயகத்தின் நினைப்பினிலே
        நெஞ்சம் வேகும் !