114
காரியவாதி
"அவள் வகை கெட்டவ, அதனாலே அவளுக்கு அந்த கதி! நீ போய் அடிச்சுப் பிடிச்சு, அந்த வீட்டிலே அதிகாரம் பண்ணப் பார்க்கணும்..."
"அதுக்கென்ன, அடுத்த வீட்டுக்காரிக்குப் புத்தி சொல்றதுன்னா யாருக்கும் சுலபமாத்தான் இருக்கும். நான் உன்னை ஒண்ணு கேட்கிறேன்—நீ கோவிச்சுக்குவியா?"
"என்ன, கேளேன்?"
"உன் புருசனுடைய தங்கச்சி, அடிச்சுப் பிடிச்சு உன்னை அதிகாரம் பண்ண ஆரம்பிச்சா நீ சும்மா இருப்பாயா!"
"நீ போடி, அம்மா! நான் அவ்வளவு தூரத்துக்கு வரலே. என்னமோ நல்லதைச் சொல்ல வந்தா, அதுக்கா என்னை இப்படிக் குத்திக் கேட்கிறே?" என்று 'சட்'டென்று எழுந்து போய் விட்டாள் அவள்.
அதற்குமேல்தான் அவள் என்னத்தைச் சொல்வது? என்னமோ 'ஊருக்கு உபதேசம்' செய்யும் சில சீர்திருத்தவாதிகளைப் போல அவளும் பேசிப் பார்த்தாள். கடைசியில், அவள் அப்படித் திருப்பிக் கேட்பாள் என்று எதிர் பார்த்தாளா?
எந்த விதத்திலும் தங்களுடைய சுயநலத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் திருக்கூட்டத்தில் இரண்டு விதம் உண்டு. ஒன்று, பிறரைப் பகைத்துக் கொண்டு தன்னுடைய சுயநலத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்; இன்னொன்று, பிறரைப் பகைத்துக் கொள்ளாமலேயே தன்னுடைய சுயநலத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்.
இரண்டாவதாகக் குறிப்பிட்ட கோஷ்டியைச் சேர்ந்தவன் பொன்னியின் அண்ணன். விருத்தாசலத்தின் இறுதிச் சடங்கின்போது வந்திருந்த அவன் போகும்போது பொன்னியை நோக்கிச் சொன்னான்:
"அம்மா! உன் மனசு இப்போ என்னவெல்லாமோ நெனைக்கும். 'அண்ணன் இருக்கச்சே நமக்கு என்ன பயம்?'