குழந்தையின் குதூகலம்
53
இதனால்தானோ என்னவோ, சர்க்கார் அதிகாரிகளைப் போலவே சுவாமிகளும் அவரைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டனர். அவருடைய திருத் தொந்தியைப் போலவே வியாபாரமும் நாளொரு மண்டியும் பொழு தொரு ஊருமாகப் பெருகி வந்தது. அதாவது, வெகு சீக்கிரத்திலேயே தமிழ்நாடு பூராவும் கிளைக் கடைகளை ஆரம்பித்து நடத்தினர். சொந்தத்திலேயே எண்ணெய் ஆலை ஒன்றும் வைத்தாகிவிட்டது. வருஷ வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்பிடப்பட்டு வந்தது. ஸ்தாவர, ஜங்கம சொத்துக்காக வாங்கி வாங்கிச் சேர்த்துக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் பணம் ‘சரியாயிருக்கிறதா?’ என்று எண்ணிப் பார்த்துக் கொள்வதைத் தவிர அவர் வேறு ஒரு பாவமும் செய்து அறியார்!
மணியின் தகப்பனாருக்குத் தம் எஜமானரின் மேல் கொள்ளை ஆசை. “எசமான், ‘மாணிக்கம், மாணிக்கம்!’ன்னு என் மேலே உசிரையே வச்சிருக்காரு!” என்று தம் மனைவியிடம் அவர் பெருமையுடன் சொல்லிக் கொள்வார். “சம்பளத்திலே ஒண்ணையும் காணோமே!” என்பாள் அவள், அலட்சியமாக.
“சீ, போ? பணமா பெரிது? மனிசன் அன்பு இல்லே பெரிசு!” என்பார் மாணிக்கம் பிள்ளை.
ஆமாம், அவருக்கு எப்போதுமே தம் உரிமையைவிடக் கடமை பெரிது. இல்லையென்றால் கேவலம் முப்பது வருடத்திற்குள் ஒண்ணே கால் டஜன் ரூபாய்களைச் சம்பளமாகப் பெறுவதென்பது அவ்வளவு லேசான காரியமா?
நல்ல வேளையாக, மாணிக்கம் பிள்ளையைப் பிடித்த ‘பைத்தியம்’ கதிர்வேலு நாடாரையும் பிடித்து விடவில்லை. அவருக்குத் தம் கடமையைவிட உரிமைதான் எப்போதும் பெரிது!