}}
விண்ணைச் சாடியது அவள் பார்வை. கற்பனை போல எல்லையற்ற வண்ண விதானமே, நீயாகிலும் அவளுக்கு இத மொழி சொல்லாயா?
அமிர்தம் பொழிந்த நிலவைப் பார்த்தாள். நிறை மதியே, உன் சீதளக் கதிரெனச் சில வார்த்தைகளை அவளுக்குக் கூறிச் சாந்தி செய்யமாட்டாயா?
‘பவளக்கொடி.’
‘ஆயா.’
‘கேட்டியா சேதியை?’
‘கேட்கிறது என்ன ஆயா. மாமா துப்பு இப்பல்ல புரியுது. கண்ணாலமா? எனக்கா? மச்சானை மறந்துட்டா? ஒருக்காலும் ஏலாது. காளி மேலே சத்தியமிட்டுச் சொல்லுகிறேன். இனி மச்சான் ஞாபகம் ஒண்டியே எனக்கு உலகம். மாமா கிட்டே சங்கதியைச் சொல்லிப்போடு.’
"பவளம், கலங்காதே. உன் எண்ணத்துக்குக் குறுக்கே நான் எதுவும் செஞ்சிடமாட்டேன்.”
மறுமுறையும் தேவன் வந்தபோது, தன் மகள் ஒப்பவில்லை என்று சொல்லியதைக் கேட்ட அவன் தீப்பறக்கப் பேசிச் சென்ற வார்த்தைகள் அவளைச் சித்திரவதை செய்தன. அவள் கொடிபோலத் துவண்டு போனாள்.
‘என்னா திமிரு? மாமனா அவன்? பணம் ஒண்ணு இருந்தாக்க அல்லாரையும் கொடிகட்டி ஆண்டிட முடியுமாக்கும். அவன் பணம் அவனோடே. என்னை அவனுக்குக் கல்யாணம் பண்ணித் தராமப் போனா ஆளையே தூக்கிட்டுப் போயிடுவானமே. அத்துக்குத்தான் சம்யுக்தை-பிருதிவி மகாராசா காலங்கூடப் புல் முளைச்சுப் போச்சுதே——’
‘ஆயா, நம்ம ரெண்டுபேரும் நிலந் தெளியறத்துக்குள்ளாற மாமன் கண்ணுக்குத் தெரியாத இடத்துக்கு ஓடிப் போனாத்தான் தப்பிக்கலாம் போல. என்ன செய்யிறது? பாம்பைக் கண்டாக்க நாமதானே தள்ளிப் போகவேனும்.’