பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


தேவேந்திரன் இந்திராணியை மனைவியாகப் பெற்றான். ஆறுமுகப் பெருமானின் தந்தையாகிய சிவபெருமான் உமையைப் பெற்றான். செந்தாமரைக் கண்ணனாகிய திருமால் இலட்சுமியைப் பெற்றான். அவ்வாறே நீயும் சீதையைப் பெற்றாய் நன்மை யாருக்கு? அவருக்கா? இல்லை! உனக்கே.

ஐயா– ஐயனே; இந்திரன்– தேவேந்திரன்; சசியைப்பெற்றான்– இந்திராணியைத் தனக்குரியவளாகப் பெற்றான்; இரு மூன்று வதனத்தோன்– ஆறுமுகப் பெருமானின்; தந்தையும்– தந்தையாகிய சிவபெருமானும்; உமையைப் பெற்றான்– பார்வதியைப் பெற்றான்; தாமரை செங்கணானும்– செந்தமாரை போலும் கண்கள் கொண்ட திருமாலும்; செந்திருமகளைப் பெற்றான்– அழகிய இலட்சுமியைப் பெற்றான்; (அவ்வாறே) நீயும் சீதையைப் பெற்றாய்– நீயும் சீதையைப் பெற்றுவிட்டாய்; அந்தரம் பார்க்கின்– நன்மை உனக்கே அவர்க்கு இல்லை.

கரனையும் மறந்தான்; தங்கை
        மூக்கினைக் கடிந்தும் நின்றான்
உரனையும் மறந்தான்; உற்ற
        பழியையும் மறந்தான்; வெற்றி
அரனையும் கொண்ட காமன்
        அம்பினால், முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான்: கேட்ட
        மங்கையை மறந்திலாதான்.

சூர்ப்பணகை சொல்லக் கேட்ட மங்கையை மறவாத இராவணன், தன்னை முற்றிலும் மறந்தான்.