பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

185


நீங்கள் பெற்றுள்ள வலிமையையும், முற்பிறப்பில் செய்த தவமும், நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் படைகளையும், தேவர் கொடுத்த நல்ல வரங்களையும் நீங்கள் கொண்டுள்ள சிறப்புக்களையும், ஆங்காங்கே வெற்றித்தூண் நாட்டி நீங்கள் தீட்டியுள்ள மெய்க்கீர்த்தியையும் நீங்கள் பெற்ற பின் திருத்தி வைத்திருக்கிற ஆட்சியும், சுகபோக வாழ்வும் எல்லாம் நீட்டிய தனது கணை ஒன்றால் அடியோடு ஒழிக்கக் கங்கணம் கட்டி நிற்பவன்.

***

ஈட்டிய வலியும் - நீங்கள் பெற்றிருக்கின்ற உடல்வலிமையையும்; மேனாள் இயற்றிய தவமும்-முற்காலத்திலே நீங்கள் செய்திருக்கிற தவத்தையும்; யாணர் கூட்டிய படையும்- நீங்கள் சேர்த்து வைத்திருக்கிற ஆயுதங்களையும்; தேவர் கொடுத்த நல்வரமும் - தேவர்கள் உங்களுக்கு அளித்துள்ள நல்ல வரங்களையும்; கொட்பும் - மற்றும் நீங்கள் கொண்டுள்ள சிறப்புக்களையும்; தீட்டிய பிறவும் - நீங்கள் ஆங்காங்கு ஜெயஸ்தம்பங்கள் நாட்டி அவற்றிலே தீட்டி வைத்திருக்கிற வீரப்பிரதாபங்களையும் பிறவற்றையும்; எய்தித் திருத்திய வாழ்வும் - நீங்கள் பெற்றுப் பின் திருத்திக்கொண்ட அரசாட்சி, சுகபோக வாழ்வு முதலியவும்; எல்லாம் - இன்னும் உங்களுக்குரிய எல்லாவற்றையும்; நீட்டிய பகழி ஒன்றால் - நீண்ட தனது அம்பு ஒன்றினால்; முதலொடு நீக்க - பூண்டோடு அழிக்க; நின்றான் - உறுதி கொண்டுள்ளான் அவன்.

***

தேவரும் பிறரும் அல்லன்
        திசைக் களிறு அல்லன்; திக்கின்
காவலர் அல்லன்; ஈசன்
        கயிலையங்கிரியும் அல்லன்;