பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264


இந்திரன் செம்மல் பண்டு ஓர்
        இராவணன் என்பான் தன்னைச்
சுந்தரத் தோள்களோடும்
        வாலிடைத் தூங்கச் சுற்றிச்
சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்
        தேவர் உண்ண
மந்திரக் கிரியால் வேலைக்
        கலக்கினான் மைந்தன் என்றான்.

“முன்பு ஒரு காலத்திலே இராவணன் என்பவனை அவனது அழகிய தோள்களுடன் தன் வாலிலே தொங்கக்கட்டி, மலைகள் தோறும் தாவித்திரிந்தவனும், தேவர்களுக்கு அமுதம் வழங்கும் பொருட்டு மந்திர கிரியால் பாற்கடலைக் கடைந்தவனும், இந்திரன் குமாரனுமாகிய வாலியின் மகன்” என்றான்.

***

இந்திரன் செம்மல் - இந்திரன் மகனும்; பண்டு - முன்பு ஒரு காலத்திலே; ஓர் இராவணன் என்பான் தன்னை - மிகப் புகழ்பெற்று விளங்கிய ஓர் இராவணன் என்பவனை; சுந்தரத் தோள்களோடும் - அவனது இருபது கரங்களோடும்; வாலிடைத் தூங்கச் சுற்றி - தன் வாலிலே சுற்றிக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு; சிந்துரக்கிரிகள் தாவித்திரிந்தனன் - யானைகள் உலவுகின்ற மலைகள்மீது தாவித்திரிந்தவனும்; தேவர் உண்ண - தேவர்கள் அமுதம் உண்ணும் பொருட்டு; வேலைக் கலக்கினான் - மந்தர கிரியால் பாற்கடலைக் கடைந்தவனுமாகிய வாலியின்; மைந்தன் - மகன்; என்றான்.

***