பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

283

அவன் என்னால் ஆனவரை பொருவேனென்ற நம்பிக்கையோடு இருக்கிறான்.

இராமனை சேர்தல் செஞ்சோற்றுக் கடனைத் தீர்த்தது ஆகாது. எனவே போர்க்கோலங் கொண்டேன். என் உயிரைக் கொடாது அங்கு போகேன்!” என்றும் திடமாகக் கூறிவிட்டான். அதே சமயம் விபீடணனை எப்போதும் இராமனிடமே இருந்து, இலங்கை அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்றும் உறுதியாகக் கூறுகிறான் இளைய அரக்கன்.

இராமன் இதை அறிகிறான்.‘விதி வலிது’ என்கிறான். வானரங்களை படாதபாடு படுத்துகிறான் கும்பகன்னன். அங்கதனுக்கும் கும்பகன்னனுக்கும் பெரும்போர் நடக்கிறது. அங்கதன் மார்பில் சூலத்தை எறிகிறான் கும்பகன்னன். அநுமனுடன் போரிடுகிறான். அநுமனும் சளைக்கவே இலட்சுமணன் கும்பகன்னனுடன் நீண்டநேரம் பொருகிறான். சுக்ரீவனும் பொருகிறான். இளையவன் அரக்கனை பாதாரியாக்கி, அவனுக்குத் துணையாக வந்த சேனையையும் அழிக்கிறான். கும்பகன்னன் சூலத்தை எறிகிறான்; அநுமன் அதை முறித்தெறிகிறான். மூர்ச்சையான சுக்ரீவனை இலங்கைக்குத் தூக்கிக்கொண்டு செல்ல அவன் முயலும்போது, இராமனின் கணை கும்பகன்னனின் நெற்றியில் பாய்கிறது. அவன் மூர்ச்சிக்கிறான் சுக்ரீவன் கும்பகன்னனின் காதையும் மூக்கையும் அறுத்துக்கொண்டு செல்கிறான். இராவணன் தன் தம்பிக்கு மீண்டும் துணை செய்ய சேனை அனுப்புகிறான். அது இராமனின் அம்புக்கிரையாகி அழிகிறது. கும்பகன்னனின் இரு தோள்களையும் தாள்களையும் இராமனின் வில் துணித்துவிட்டாலும் வெறும் உடலுடனே வீரமாக பொரும் கும்பகன்னனின் வீரம்தான் என்னே!

இறுதியில் கும்பகன்னன் இராமனிடம் விபீடணனை பாதுகாக்கவேண்டும் என வேண்டுகிறான்.