பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298


பச்சை வெம் புரவி வியா பல்லியச்
        சில்லி பாரின்
நிச்சய மற்று நீங்கா வென்பது
        நினைந்து வில்லின்
விச்சையின் கணவனானான்
        வின்மையால் வயிரமிட்ட
அச்சினோடு ஆழி வெவ்வேறு
        ஆக்கினான் அணி நீக்கி.

வில் வித்தைக்குத் தலைவனான லட்சுமணன், அந்தத் தேரில் பூட்டிய குதிரைகளைக் கூர்ந்து கவனித்தான். அந்த தேர்ச் சக்கரங்கள் உடையாதவை என்பதையும் உணர்ந்து, அவைகள் வீழும் வண்ணம் வில்லின் வன்மையால் தேர்ச் சக்கரத்தின் கடையாணியைக் கழற்றி, அச்சக்கரங்களை சுக்கு நூறாக்கிறான். (தேர் வீழவே, குதிரைகளும் சிதறின.)

***

வில்லின் விச்சையின் கணவனானான் - வில் வித்தைக்குத் தலைவனான லட்சுமணன்; பச்சை வெம் புரவி வியா - (இந்திரசித்து ஏறியிருக்கும் தேரிற் கட்டிய) பசிய நிறம் அமைந்த கொடிய குதிரைகளும் சாக மாட்டா; பல்லியச் சில்லி - (அத்தேரின்) பல ஒலிகளையுடைய உருளைகளும்; பாரின் - பூமியில்; அற்று - அழிந்துபோய்; நிச்சயம் நீங்கா - திண்ணமாய் ஒழியமாட்டா; என்பது நினைந்து - என்பதை எண்ணி; வின்மையால் - தன் வில்லின் திறமையால்; ஆணி நீக்கி - ஆணிகளை பிரித்து அப்புறப்படுத்தி; வயிரம் இட்ட அச்சினோடு ஆழி - வயிரம் பிடித்த (மரத்தாலான) அச்சையும், சக்கரங்களையும்; வெவ்வேறு ஆக்கினான் - தனித்தனியே பிரித்து எறிந்தான்.

***