பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கற்பனைச்சித்திரம்



செய்ய வந்த போலீசாரைப் பார்த்து நீங்களும் ஏழைகள் தானே என்று சொந்தம் கொண்டாடவும் தொடங்கிற்று. சீமான்கள் அலறி ஓடினர். சக்திக்கேற்ற உழைப்பு! தேவைக்கேற்றவசதி! என்ற முழக்கம் எங்கும் கேட்டது..." என்று ரேடியோவிலே, யாரோ, பிரஞ்சுப் புரட்சியையோ, ரஷியப் புரட்சியையோ, விளக்கிப் பேசிக்கொண்டிருக்கவே, விஸ்கி பாட்டிலை ரேடியோ மீது அடித்துவிட்டு, பூபதி பெருங் கூச்சலிட்டான். ஓடோடி வந்த தாயார், "என்னப்பா பூபதி!" என்று கதறினார்கள். "கெட்ட சகவாசம் வேண்டாமென்றால் கேட்கிறானா" என்றார் தகப்பனார். டெலிபோன் மூலம் சேதிகேட்டு விரைந்து வந்த டாக்டர் தினகர், "ஒன்றும் இல்லை, ரொம்பக்களைத் திருக்கிறார். ஒரு மாதம், ஊட்டி போய் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்று மருந்து இருக்குமிடத்தைக் கூறிவிட்டுப் போனார். பங்களாத் தோட்டக்காரச் சிறுவன்.

"வடக்கே ருஷிய நாடொன்றிருக்குதாம்

அங்கே.................."

என்ற பாட்டைப் பாடினான். விஸ்கியுடன் டாக்டர் கொடுத்த மருந்தும் சேர்ந்து, பூபதிக்கு மயக்கத்தைத் தந்தது. பாட்டுக் காதிலே பட்டதும் படாததுமாக இருக்கையிலேயே, படுக்கையில் சாய்ந்துவிட்டான்.