பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமானுச கவிராயர்

75

இராமானுசர்

சாதியாரிடம் உணவு உண்டிருப்பார் என்று தங்களோடு சேர்த்துக் கொள்ளாமல் விலக்கிவிட்டனர். இதனால் இராகவானந்தருக்கும் இவருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தது. அந்த வாதத்தின் விளைவாக வைஷ்ணவ சமயத்தில் சில மாறுதல்கள் உண்டாயின. "கடவுளிடத்து அன்புள்ளவர்களிடம் உயர்வு தாழ்வு கருதக் கூடாது; மக்களெல்லோரும் கடவுளின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே; அவர்கள் ஒரே இனத்தவர் எனக் கருதவேண்டும் " என்று இராமானந்தர் உபதேசித்தார். தாம் உபதேசித்தது போலவே நடந்தும் வந்தார். கடவுளை அடையும் நெறி ஆண், பெண், முதியோர், இளையோர், கற்றவர், கல்லாதவர் ஆகிய எல்லோரும் ஒழுகக்கூடிய எளிதான அன்பு நெறியாக இருக்கவேண்டும் என்பது இவருடைய எண்ணம். எல்லோரும் எளிதில் தெரிந்துகொள்ளும்படி சமய நூல்கள் தாய்மொழியில் இருக்கவேண்டும் என்று இவர் சொல்லி வந்தார். இவர் முயற்சியினாலே இவருடைய தாய்மொழியாகிய இந்தி மொழி வளர்ச்சியடைவதாயிற்று. இவரைப் பின்பற்றிக் கபீர்தாசர், துளசிதாசர் என்னும் அடியார்கள் தம்முடைய பாடல்களையும், தோத்திரங்களையும், நூல்களையும் இந்தியிலேயே இயற்றினர். இவ்வாறு இராமானந்தருடைய உபதேசமானது பொது மக்களுக்கும் தாய்மொழிக்கும் பெருந்தொண்டு செய்வதாயிற்று.

இராமானந்தர் இயற்றிய பாடல்களில் ஒன்றிரண்டே இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. சீக்கியருடைய சமய நூலாகிய கிரந்த சாகேபில் இவரது பாட்டு ஒன்று சேர்ந்திருக்கிறது. "கடவுள் எங்கும் நிறைந்தவர் ; அவர் எல்லாப் பொருள்களிலும் கலந்து உறைகின்றார்; என் உள்ளத்திலும் இருக்கின்றார்" என்பது அதன் கருத்து.

அன்பு நெறியை வட இந்தியாவில் பரவச் செய்த இராமானந்தர் இராமபிரானைத் தம்முடைய வழிபடு மூர்த்தியாகக் கொண்டார்.

இராமானந்தருடைய மாணவர்களுள் சிறந்தவர்கள் ரவிதாஸ், கபீர், தன்னா, சேனா, பீபா, பவானந்தர் சுகானந்தர், அனந்தானந்தர், சுர்சுரானந்தர், பரமானந்தர், மகானந்தர், ஸ்ரீ ஆனந்தர் என்னும் பன்னிருவர். பத்மாவதி, சுரசரி என்னும் இரண்டு பெண்களும் இவருக்கு மாணவிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களைப் போலவே பெண்களும் அத்யாத்ம நெறியில் நிற்பதற்குத் தக்கவர் என்று இவர் உணர்ந்தார்.

கபீர் தாசர் ஒரு முஸ்லிம். அவர் இராமானந்தருக்குச் சீடரானார். கபீருடைய மாணவர் சீக்கிய சமயத்தை ஏற்படுத்தின குரு நானக்.

ஆழ்வார்களுடைய அன்புநெறி வடநாட்டில் பரவுவதற்குக் காரணமாக இருந்த சிறந்த பெரியோர்களில் இராமானந்தர் ஒருவர்.

இராமானுச கவிராயர் (19ஆம் நூ.) சிவஞான முனிவர் மாணவராகிய, இராமநாதபுரம் சோமசுந்தரம் பிள்ளையவர்களின் மாணவர்களில் ஒருவர். இராமநாதபுரத்திலே பிறந்து சென்னையில் வாழ்ந்தவர். பார்த்தசாரதி மாலை, திருவேங்கட அனுபூதி, வர தராசப் பெருமாள் பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களை இயற்றியவர். இவற்றால் இவர் வைணவரென்று தெரிகிறது. சென்னையில் அக்காலத்திலிருந்த கிறிஸ்தவ போதகர் துரு, கிளார்க்கு, போதகர் ராஜர்ஸ் என்னும் ஆங்கிலேயர் வேண்டுகோளுக் கிணங்கி நன்னூற் காண்டிகையுரை எழுதினார். இது 1847-ல் இவரால் அச்சிடப்பட்டது. மற்றும் திருக்குறள். நறுந்தொகை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களுக்கும் காண்டிகையுரை எழுதியிருக்கிறார். சிறந்த உரையாசிரியர். இலக்கணச் சுருக்கம் ஒன்றும் எழுதியிருக்கிறார். ஆத்மபோதப் பிரகாசிகை என்னும் வடமொழி நூலைத் தமிழாக்கி யிருக்கிறார். போதகர் ஜீ. யு. போப், வின்ஸ்லோ, சரவணப் பெருமாளையர், விசாகப் பெருமாளையர் முதலியவர்கட்குத் தமிழாசிரியராக இருந்தவர். வின்ஸ்லோ அகராதி நிறைவேறத் துணை செய்தவர்களில் இவர் சிறந்தவர்.

இராமானுசர் (1017-1137) சென்னைக்கு அடுத்த ஸ்ரீ பெரும்பூதூரில் பிறந்தார். தந்தை ஆசூரிகேசவப் பெருமாள், தாய் காந்திமதி. குழந்தையைப் பார்க்க வந்த தாய்மாமன் திருமலைநம்பி குழந்தையின் இலட்சணங்களைப் பார்த்ததும் இலட்சுமணன்போல் இருப்பதால் இராமானுசர் என்று பெயரிடும்படி கூறினார். இவர் 16 வயதுவரை வேதங்கள் கற்றார். மணமும்நடந்தது. அதன்பின் வேதாந்தம் கற்பதற்குக் காஞ்சீபுரத்தில் இருந்த யாதவப் பிரகாசரிடம் சென்றார். அப்போது ஸ்ரீரங்கத்திலிருந்த ஆளவந்தார் என்னும்

இராமானுசர்

திருப்பதி மலைக்கோயிலில் உள்ள செப்புச் சிலை

உதவி : வை. மு. நரசிம்மன்.

யாமுனாசாரியார் இராமானுசருடைய திறமையைக் கேள்வியுற்று, அவரைப் பார்ப்பதற்காகக் காஞ்சீபுரம் வந்தார். அவரைக் கண்டவுடன் அவரே தமக்குப் பின்னர் வைணவ ஆசாரியராக இருக்கவேண்டுமென்று ஸ்ரீ வரதராசரிடம் வேண்டிக்கொண்டு ஸ்ரீரங்கம் போய்ச்சேர்ந்தார். யாதவர் வேதாந்த சுலோகங்களுக்குக் கூறிய வியாக்கியானங்கள் இராமானுசருக்குப் பிடிக்காதுபோகவே இராமானுசரும் அவரிடமிருந்து விலகிக்கொண்டார்.

ஆளவந்தார் நோயுறவே, இராமானுசரை அழைத்து வரும்படி தம் சீடராகிய பெரிய நம்பியைக் காஞ்சிக்கு அனுப்பினார். இராமானுசர் ஸ்ரீரங்கம் வந்து