62
மது அவனுக்குச் சின்னம்மா ஆகப் போகிறாள். எனக்கு ரொம்ப வேதனையாகப் போய்விட்டது. களங்கமில்லாத அந்த நட்புக்கு இவ்வளவு சோதனையா? அவள் என்னோடு பேசியது தவறா? நான் ஏன் பேசக்கூடாது? நான் ஒருத்தியைத்தான் மனைவியாகப் பார்க்கிறேன். அவளை என் சகோதரியாகப் பார்க்கவில்லை. அது உண்மை தான். அப்படி பிற ஸ்திரீகளைப் பார்க்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அவளை மட்டும் என்னால் அப்படிப் பார்க்க முடியவில்லை. அதற்குத்தான் அவள் ஒரு புதிய சொல்லைப் படைத்துத் தந்திருக்கிறாளே.
‘நட்பு’ என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படவே கூடாதா. ஏன் ஏற்படக் கூடாது. சரி இவர்களைக் கேட்டுக் கொண்டுதான் என் நட்பு வளர வேண்டும்.
‘அம்மாவுக்குப் பைத்தியம்’ என்ற சொல்லை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது. அவனையும் என்னையும் விட்டுவிட்டு அவள் ஆணைக்கு அஞ்சித் தெருவில் வந்து நின்ற டாக்சியில் ஏறி அவள் தன் பிறந்த அகத்துக்குச் சென்று விட்டாள். ஏன் அவள் அவசரப் பட்டாள்? நான் அவளுக்குச் சொந்தம். அதற்கு உரிமை கொண்டாடினாள். நான் அவளுக்குச் சொந்தம்தான். அதனால் என் நினைவுகளில் மதுவுக்கு இடம் இருக்கக் கூடாதா?
மது அவளை என்னால் மறக்க முடியாது. அவளைப் பற்றிய போதை எனக்கு ஏறிவிட்டது. அவளைப் பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. அதற்கு யார் பொறுப்பு. மினிதான் பொறுப்பு. அவள் கிழித்த கோட்டை நான் தாண்டியதில்லை. அது அவளுக்குப் பெருமையாக இருந்தது. அதைப் பலரிடம் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறாள். அது கெட்டுவிட்டது.