பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மார்ச் 18


தீயோரிடம் மன்னிக்கும் நெறியில் கொள்ளும் உறவு

என்னைக் கெடுத்து விடாமல் காப்பாற்றி அருள்க!

ஆண்டவனே! எல்லாம் நின் செயல் என்று கூறுகிறார்களே, இது உண்மையா? இறைவா, சில மனிதர்கள் தங்களுக்கு வாய்த்திருக்கும் எந்த நல்லதையும் பயன்படுத்துவதில்லை; முறையாக வாழ்வதில்லை; முறையாக வாழ ஆசைப்படுவதும் இல்லை. எதையாவது செய்து மாட்டிக் கொள்கிறார்கள், உன் அடியானாகிய என்னிடம் வருகிறார்கள். காப்பாற்ற வேண்டுகிறார்கள். எனக்கோ ஒரே குழப்பம். நல்லதின் வாசனையே இல்லாத இந்த மனிதனைக் காப்பாற்றக்கூடாது என்று மனம் போராடுகிறது. சமுதாயத்தின் மனசாட்சி காப்பாற்றக் கூறுகிறது.

ஆம்! இறைவா, நீ யாரையும் கெடுத்ததில்லை, அழித்ததில்லை. நானும் அந்த வழியில் தானே வரவேண்டும். ஆனால், இறைவா, உன்னால் வாழ்வு பெற்றோரெல்லாம் உன்னேயே எதிர்த்துப் போராடினார்கள். என்னோடும் அவர்கள் போராடினால் என்னால் தாங்க இயலுமா? என்ன இறைவா, தாங்கிக் கொள்ளத்தான் வேண்டுமா? திருவருள் ஆணை இறைவா! உன் வழியில் பாவிகளையும் மன்னிக்கிறேன். ஆனால் இறைவா, ஒன்றை மறந்துவிடாதே தீயவர்களின் உறவு முட்புதர் அணையது. முட்புதர் அதனை அழிப்பவன் காலையும் குத்திக் காயப்படுத்தும். அதுபோல, தீயோரிடம் மன்னிக்கும் நெறியில் கொள்ளும் உறவு என்னையும் கெடுத்து விடாமல் காப்பாற்றி அருளுவது உன் கடமை.