102
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இறைவா, ஆண்டவனே! எங்கணும் நீக்கமற நிறைந்திருக்கும் நின்மலனே, உன் உண்மையான பெயர் என்ன? இன்னும் ஏன் அதை எங்களுக்குச் சொல்லித்தரவில்லை. அதனால்தானே நாங்கள் ஆளுக்கு ஒரு பெயர் சொல்லி உன்னை அழைக்கின்றோம், வாழ்த்துகின்றோம்.
கடைசியில் கடவுள் ஒருவர்தானா? அல்லது பலரா? என்ற அளவுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. சந்தேகம் மட்டுமா? நாங்கள் பல்வேறு மதத்தவராகிச் சண்டை போட்டுக் கொள்கிறோம்! ஏன் இந்தச் சோதனை? இறைவா, என்ன சொல்கிறாய்? உண்மையாகவா? உனக்குப் பெயர் இல்லையா? உருவம் இல்லையா? ஒன்றுமே இல்லையா? அப்படியா இறைவா? உன் பெயர் உண்மை. நீ சுத்த அறிவு. நீ தூய அன்பின் திருவுரு. நீ உலகத்தை இயக்கும் பேராற்றல். புத்தி வந்தது. நீ உலகத்துக்கு ஓர் உண்மை, ஆற்றல், அன்பு, உனக்கு நாடு இல்லை. மதங்களின் எல்லை இல்லை.
நீ, எல்லை கடந்த பரம்பொருள். உன்னை நான் அடைய வழி, நானும் எல்லை கடப்பதே. ஆம் இறைவா, சிற்றெல்லைகள் வேற்றுமையை வளர்க்கின்றன; பகையை வளர்க்கின்றன. இறைவா, என்னைச் சிற்றெல்லைகளிலிருந்து விடுதலை செய்துகொள்ள அருள் செய்! உனது பறந்த எல்லைக்கு-அகண்ட வெளிக்கு வர அருள்செய்க!