பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





மே 1


மனிதர் வியக்கும் சித்துக்கள் வேண்டாம், மனிதர் மதிக்கும் மாண்பினை அருள்க !


இறைவா, நரியைப் பரியாகச் செய்வாய்! வித்தின்றியே விளைவு செய்வாய்! நன்றே செய்வாய்! பிழை செய்வாய்! நானோ இதற்கு நாயகம்! இறைவா, நான் ஒரு சித்தன் ஆக விரும்புகின்றேன். சித்தன் என்றால் மனிதன் படைக்கும் சில பொருள்களை வரவழைத்துக் கொடுப்பதல்ல. அதை நான் விரும்பவில்லை. அவற்றின் மதிப்பு, மிகமிகக் குறைவு.

இறைவா, எனக்கு என் சித்தம் அடங்கவேண்டும். என் சித்தத்தை எனக்கு நன்மை செய்யத்தக்கதாக வளர்த்துப் பழக்கிக் கொள்ளவேண்டும். என் சித்தத்தை அதன் உயர் எல்லை வரையில் நான் வளர்த்து அந்தப் பயனைத் துய்க்க வேண்டும்.

என் சித்தம், சிந்தனை என்ற ஊற்று வற்றாததாக அமைய வேண்டும். என் சித்தம் அறிவார்ந்த சிந்தனையில் ஓயாது ஈடுபட வேண்டும். என் சித்தத்தில் இரக்கம் வேண்டும். என் சித்தம் ஈதல் பண்பில் திளைக்க வேண்டும். என் சித்தத்தை அழகாக அமைத்துக் கொள்ளல் வேண்டும். இறைவா, அருள் செய்க!

என் சிந்தனை நின் திருவடிப் போதுகளுக்கே. என் சிந்தனை அன்பிலே நனைந்து அருளிலே திளைத்து மகிழ்தல் வேண்டும். என் சிந்தனை என் வசமாகிய நிலையில் இன்பமே. மனிதர் வியக்கும் சித்துக்கள் வேண்டாம்! மனிதர் மதிக்கும் மாண்பினை அருள் செய்க!