பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை 143



மே 6


இறைவா, எல்லாருக்கும் நல்லவனாக நடக்க அருள்க!
ஆனால், எல்லாரையும் திருப்திப் படுத்தும் வாழ்வு வேண்டாம்.


இறைவா, புகழ்ச்சியைக் கடந்த போகமே! என் வாழ்க்கை பொருளுடையதாக அமைந்திட அருள் செய்க! என் வாழ்வு, பாழுக்கிறைத்ததாகப் போய்விட்டது! இன்று நான் செய்வதெல்லாம் பாழுக்கிறைத்தனவே! இறைவா, நான் ஒரு பொய்ம்மைப் பொருளானேன்! உள்ளீடில்லாச் சுரைக்காயானேன் !

இறைவா, சுரைக்கூடு கூடப் பொருள் இட்டு வைக்க உதவும்! நான் என்னானேன்! எதற்கானேன்! வினாக்களுக்கு விடை காணேன். இறைவா, என்னை நான் பாழ்படுத்திக் கொண்டேன். புகழ் ஆசைக்கு ஆட்பட்டேன்! வந்தது அவலம் !

நான் பலரையும் திருப்திப்படுத்த முயற்சி செய்கிறேன்! ஆம், இறைவா! இது சத்தியம். உண்மை. ஒன்றுக்கும் ஆகாத பைத்தியக்காரனைக் கண்டால் கூட அவனுக்கும் நல்லவனாக நடக்க ஆசைப்படுகிறேன். நீ சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் பைத்தியக்காரனிடம் நான் பரிவு காட்டவில்லை! நானும் புகழ்ப் பைத்தியக்காரனாகி பைத்தியக்காரனுடன் பேசுவதும் செய்தியாகாதா? பாடமாகாதா? என்று எண்ணுகிறேன்!

இறைவா, எல்லாருக்கும் நல்லவனாக நடக்க அருள் செய்க! ஆனால் எல்லாரையும் திருப்திப்படுத்தும் பரிதாபகரமான வாழ்வு வேண்டாம்! பலரையும் திருப்திப்படுத்தும் வாழ்க்கையில் உண்மை குறை போகக் கூடாது. இறைவா, வாய்மை வழாத நிலை அருள் செய்க! ஐயத்தின் நீங்கிய தெளிவினைத் தருக! ஒரு நெறியில் நின்று நிலை பெற அருள் செய்க! இறைவா, அருள்செய்க!