பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை 145



மே 8


இறைவா, நீ ஒருவனே என்பதை உணர்ந்தேன்


இறைவா, உனக்கு என்று ஒன்றும் இல்லை! ஐயோ பாவம் ஓருரும் இல்லை, ஒரு நாமமும் இல்லை. ஆயினும் உனக்கு என்ன குறை? இந்தப் பூமண்டலமே உனது வீடு. உனக்கு ஆயிரம் ஆயிரம் திருவுருவங்கள்; ஆயிரம் ஆயிரம் திருநாமங்கள். இறைவா, எனக்கு ஒரே குழப்பம். உன்னை நான் எந்தப் பெயரில் அழைப்பது, உன்னை எந்த உருவில் வழிபடுவது?

இறைவா, உனக்கு ஏது பெயர்? ஏது உருவம்? நீ, நான் விரும்பும் உருவத்தை ஏற்றுக் கொள்கிறாய். திருநாமத்தை ஏற்றுக் கொள்கிறாய் அவ்வளவுதான்! நான் எங்குச் சென்றால் என்ன? எந்தத் திருக்கோயிலுக்குச் சென்றால் என்ன? நீ என்னை ஆட்கொண்ட திருக்கோலம் - நீ என்னை ஆட்கொண்டருளிய திருநாமம் - அவையே எனக்குப் பற்றுக் கோடு.

இறைவா, நின்னையன்றிப் பிறரை நினையேன். நீ ஒருவனே! ஆனால், ஒன்றென்றும் ஒருவனென்றும் ஒருத்தியென்றும் உலகு உன்னைப் பிரித்து அழைக்கிறது; போற்றுகிறது. எல்லாமே நீ தான். 'ஒன்றென்றிரு, உண்டென்றிரு' என்ற ஆப்தமொழி என் வாழ்க்கையின் பற்றுக் கோடாகி விட்டது. ஆதலால், எங்கும் உன்னையே பரசிவத்தையே காண்கிறேன்.

ஊனில் நின்றுலாவி உணர்த்துவதும் நீயே. உயிருக்கு உயிராய் நின்றியக்குவதும் நீயே. உண்ணும் உணவாக, பருகும் நீராக விளங்குவதும் நீயே. எண்ணுளே உயிர்ப்பாய் இயங்கும் வளியும் நீயே. நீயின்றி நான் இல்லை. எங்கெங்கு நோக்கினும் உன் காட்சியே! ஆட்பட்டேன்! ஆட்கொண்டருள்க! இறைவா.

கு.X.10.