பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

151






மே 14


மீனைப்போல் நான் நின் அருள் வெள்ளத்தில் வாழ அருளுக!


இறைவா, தண்ணீரில் மீன் வாழ்கிறது. தண்ணீரினின்று மீன் பிரிந்தால் செத்துப்போகும். இறைவா, நானும் மீனைப் போல் நின் அருள் வெள்ளத்திலேயே கிடக்க வேண்டும்.

இறைவா, என்றோ, ஒருபொழுது நின்னை வணங்கி என்ன பயன்? இறைவா, எப்போதும் நின் சிந்தனையிலேயே இருக்கும் அருளைப் புரியாய்? இறைவா, நினது அருள் வெள்ளத்திலேயே நனைந்து கிடக்கும் அருளைச் செய்!

இறைவா, அருள் நனைதலுக்கு இடையூறாக வந்திடும் வாசனைகள் பொல்லாதவைகளாக உள்ளன; சுண்டி இழுக்கின்றன. இறைவா, நிலை தடுமாறுகிறது. என்னை எடுத்தாளக் கூடாதா? மூல மலத்தினையே பிடித்து நெருக்கும் ஆற்றலை வழங்கியருள் செய்க!

இறைவா, எனது புலன்கள் நின் வசப்பட்டால் தூய்மையுறும்! ஆற்றல் பெருகும். இறைவா, நான் என்னை உன்னிடம் ஒப்படைக்க ஆசைப்படுகிறேன். ஆனால், இது எளிதில் நடவாது.

ஆதலால், இறைவா, நீ, என்னை வந்து எடுத்தாள்க! நீ என்னைப் பிரியாமல் இருந்தருள் செய்க! இறைவா, நின் திருவடி என் நெஞ்சத்தில் நிரந்தரமாக இருக்க அருள் செய்க!