திருவருட்சிந்தனை
169
இறைவா என் தலைவா நின் ஆற்றலால் இந்த உலகம் இயங்குகிறது. தொழிற்படுகிறது. இறைவா, நீயே ஆற்றல்! நீயே ஆற்றலின் ஊற்றுக்கண்!
இறைவா, நோக்கும் திசையெங்கும் ஆற்றல். ஆற்றலே வாழ்கிறது. ஆற்றலே வாழ்விக்கிறது. இறைவா, எனக்கு ஆற்றலை அருளிச் செய்க! நான் என்னைச் சுற்றியுள்ள எனக்குப் பொருந்தாச் சூழ்நிலையைத் தாக்கிப் போராடி மாற்றும் ஆற்றலினை வழங்கு.
என் உடம்பின் ஒவ்வோர் உறுப்பும் ஆற்றல் மிக்குடையதாக விளங்க அருள் செய்க. நான் ஆற்றல் நிலையிலேயே வாழ்ந்திருத்தல் வேண்டும்.
நான் காரியங்கள் செய்த வண்ணமாகவே வாழ்ந்திடுதல் வேண்டும். ஆற்றலே உயிர்ப்பு என்று உணர்த்திடுக. ஆற்றலே வாழ்நிலை என்று எண்ண வரம் தந்திடுக!
குறைவிலா ஆற்றலுடன் வாழ்தலே வேண்டற்பாலது. ஆற்றலை அருள் செய்க! என் வாழ்வையே ஆற்றலாக ஆக்கிடுக.
ஆற்றல் மிக்கவனாகி வியத்தகு சாதனைகள் இயற்ற அருள் பாலித்திடுக! இறைவா, ஆற்றல் மிக்குடைய வாழ்வை அருள் பாலித்திடுக!!