பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஜூன் 10


எப்போதும் விழிப்புநிலையில் இருக்க அருள் செய்க!

இறைவா, நீ புவனியில் சேவடி தோய வந்து அருளிய போதே நின்னைச் சிக்கெனப்பிடித்திலன். பேதையாயினேன். வாய்ப்புகள் தாமே வருவன. வரவழைக்க இயலாது.

கதிரவன் ஒளி, இயற்கை நியதியின்படி சுழற்சி முறையில் வருவது. கதிரவன் காயும் பொழுதுதான் பண்டங்களைக் காயப்போடுதல் வேண்டும் என்பது சராசரி அறிவு.

இறைவா, அதுபோல வாய்ப்புகள் வரும்போது, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதுதான் வாழ்க்கை முறை. வாழ்வாங்கு வாழும் நியதி. இறைவா, நான் எப்போதும் விழிப்பு நிலையில் இருக்க அருள் செய்க!

அண்ணலே, நான் எப்போதும் பணிகளை ஏற்கும் ஆயத்த நிலையில் இருக்க அருள் செய்க. இறைவா, ஊனில் உயிர் உலாவர வைத்த என் தலைவா, இந்த உடம்பைக் கொண்டே நான் முத்திநிலையை அடைய வேண்டாமா?

இறைவா, அருள்செய்க! இமைப்போதும் சோராது நின்திருவடிகள் போற்றி வாழ்ந்திட அருள் செய்க! நீ என்னைப் பணி கொள்ளும் துறைதோறும் பணிகள் செய்து வாழ்ந்திட அருள்செய்க!

நான் இனியும் ஏய்த்து ஏக்கற்றுப்போகேன். இறைவா, அருள்செய்க! வழங்குகின்ற நின் அருட் கொடை முழுதும் காண்போனாகச் செய்க.