பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஜூன் 22


சம நிலையில் அமைந்த சமுதாயமே சமுதாயம் -இறைவா அருள் செய்க!


இறைவா, வல்லார்க்கும் மாட்டார்க்கும் வாய்ப்பளிக்கும் வாய்ப்பே! இன்று என் வாழ்க்கை அப்படியில்லையே. இறைவா. வல்லாங்கு வாழ்வார் பக்கமே என் துலாக்கோல் சாய்கிறது. இது வாழ்வாருக்கு மாரடிக்கும் உலகம் இறைவா, உன் திருவுள்ளம்தான் என்ன?

மலை-மடு என்ற வேறுபாடு உன்படைப்பா? அல்லது உன் திருவுள்ளக்குறிப்பறிந்து நான்முகன் செய்த படைப்பா? இறைவா, நீ வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டவன்.

நபிகள் நாயகம் அவர்கள் "ஏற்றத்தாழ்வற்ற நடு நிலையான சமுதாயத்தினராகவும் நாம் உங்களை ஆக்கினோம்” என்று திருமறையில் அருளியுள்ளார்.

இறைவா, ஏற்றத்தாழ்வு இயற்கையுமன்று. நின் படைப்புமன்று. அது மட்டுமா? "ஆரம்பத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தினராக இருந்தனர்” என்றும் திருமறை கூறுகிறது. இறைவா, திருமறை மேலும் கூறுகிறது, "நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவர்களின் பொருள் களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்" - என்று. இறைவா, உன் திருவுள்ளம் ஏற்றத் தாழ்வற்ற சமுதாய நிலை.

இறைவா. நான் பிறர் உணவைப் பறிக்காது உழைத்து வாழும் நெறியில் என்னை நெறிப்படுத்தியருள்க! எந்தச் சூழ் நிலையிலும் சமநிலை பேணும் அறிவைத் தா. பொதுமை வேட்டு நிற்கும் வாழ்க்கையை அருள் செய்க!

சமநிலையில் அமைந்த சமுதாயமே சமுதாயம். இறைவா, அருள் செய்க! நான் உழைக்கின்றேன். உழைத்து உண்பேன். சமநிலையே சமயம். இறைவா, அருள் செய்க!