பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஜூன் 28


பிறர்க்கென வாழ்தலே பெரிய நோன்பாகும்!

இறைவா, ஏன் எனக்குப் போட்டியாக ஆணவம் இருக்கிறது. அம்மம்ம! இந்த ஆணவம் போடுகிற ஆட்டம் தாங்க முடியவில்லை. கத்திரிக்கோலின் இரட்டைச் சிறகுகள் போன்ற "நான்", "எனது” என்ற இரட்டை உணர்வுகளைக் கொண்டு அது என்னை மயக்கித் தன் வயப்படுத்துவது விந்தை!

"நான்" என்ற சொல் - உணர்வு அழியத்தான் குடும்பம். சுற்றம், சமுதாயம், என்றெல்லாம் அமைந்தன. ஆனால் இந்த அமைப்புகளுக்கு ஆணவத்தைப் போன்ற கவர்ச்சி இல்லை. ஆற்றல் இல்லை.

இறைவா, நான் சாமர்த்திய சாலி தான். அதில் ஒன்றும் குறையில்லை. ஆனால், சாமர்த்தியமெல்லாம் நன்றாற்றுவதில் இல்லை. குடும்பம், சுற்றம், சமூகம், சமுதாயம் எல்லாவற்றையுமே நான் எனக்காக ஆக்கிக் கொண்டு விட்டேன். அவற்றிற்காக நான் அல்லன். இறைவா ஏன் இந்த அவலம்? கடைசியில் என்னாகிறது; ஆணவம், ஆணவத்துடன் மோதுகிறபோது அழிவு வருகிறது.

வேண்டாம், இறைவா, "நான்" வேண்டாம்! "எனது”ம் வேண்டாம். நான் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கவே படைக்கப்பட்டேன். என் வாழ்க்கையின் குறிக்கோளே அதுதான். ஏன்? என்னிலும் தாழ்ந்த விலங்குகள் தாவரங்கள் வாழ்க்கை கூட உபயோகப்படும் வகையிலேயே இயங்குகின்றன.

நான் பிற உயிர்களுக்கு உபயோகப்பட வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் ஆணவம் தலைகாட்டாது. அன்புணர்வு வந்தமையும். பின் நீ, என் இதயத்தில் இடம் பிடிப்பாய்!

ஆம், பிறருக்கென வாழும் நோன்பே, நோன்பு இந்த நோன்பினை நோற்றால் எளிதில் உன்னை அடையலாம். இறைவா, இனி என் வாழ்வின் குறிக்கோளே இது தான். நீயும் வாழ்த்து!