214
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஜூலை 16
|
இறைவா, தீயாயிருந்து இவ்வுலகை இயக்கிடும் அண்ணலே, ஐம்பூதங்களில் தீயாகி நின்றருள்வோனே, எரியில் எழுந்தருளும் இறைவனே. எரிசக்தியே, உலக இயக்கத்திற்கு முதல்-மையமாகிய எரிசக்தி இல்லாது போனால் எதுவும் நடக்காது. இதுவே உலகியல்!
எரியாற்றல் பல்வேறு நிலையினதாக இருக்கின்றது. உலகில் உள்ள ஒவ்வொரு பொருளினும் எரியாற்றல் இருக்கிறது. அளவிற் கூடுதல்-குறைவு அவ்வளவுதான். இறைவா, உன்னைப் போலவே எரி ஆற்றல்களும் தொன்மையானவை. எரி ஆற்றல்களை நான் படைக்க முடியாது; அவை உன் படைப்பு இல்லை, அவையே நீ! ஆனால் ஒரு எரி ஆற்றலைப் பிறிதொரு வகை ஆற்றலாக மாற்றி இயக்கலாம். இறைவா, எரியாகி நின்று இந்த உலகை இயக்கிடும் தலைவனே. எனக்கு வாய்த்துள்ள எரிசக்தி போதாது இன்னும் நிறைய வேண்டும்.
இந்த உலகில் எரிபொருள் பஞ்சமே வாராதவாறு பேணிக் காத்திடுக. இறைவா, ஞாலம் திரிதரு கதிரவனின் எரி ஆற்றல் முழுவதையும் நான் பயன்படுத்தும் நெறியினைத் தந்தருள் செய்க!
கதிரவனின் ஆற்றல் முழுதும் நான் பயன்படுத்திட அருள் செய்க! கதிரொளி-என் கண்ணிற்கு அணி, கதிரொளி, எனக்கும் புற உலகுக்கும் இணைப்புண்டாக்கும் சாதனம். கதிரொளியின் ஆற்றல் எனக்கு உணவு, உணர்வு. இறைவா, அருள் செய்க!