பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜூலை 22


அன்பால் அனைத்துலகும் இணைந்து வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா, சிறியோர் செய்த பிழையெல்லாம் பொறுத்தருளும் பெரியோய்! இன்று நான் யாரிடத்தும் அன்பைக் காட்டத் தயங்குகின்றேன். அல்லது அன்பைப் பெயரளவில் போலியாகக் காட்டுகிறேன். அல்லது அன்பு காட்டுதல் என்ற பெயரில் அன்பை விலை பேசுகிறேன்.

இறைவா, அன்புகாட்டக் காரண காரியங்களைத் தேடுகிறேன். ஏதோ, எப்போதோ தவிர்க்க முடியாத போதுதான் நிர்ப்பந்தச் சூழ்நிலையில் அன்பு காட்டுகிறேன். இதனை அன்பு என்று சொல்லலாமா? சொல்லக் கூடாது! இதுவும் ஒரு வகையான சூதே.

யாதொரு குறிக்கோளுமின்றி இயற்கையாக அன்பு செய்தலே அன்பு, அன்பு காட்டக் காரணம் அவசியம் இல்லை. அன்பு காட்ட வேண்டுமா வேண்டாமா என்று அறிவு ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. படைப் பின் இலட்சியமே அன்பு செய்தல்தான்.

அன்பு இல்லாத இடத்தில் குறைகள் தோன்றும். குற்றங்கள் தெரியும், அன்பின்மையே குறை, - குற்றங்களுக்குக் காரணம். அன்பின்மை, பகைமையைத் தோற்றுவிக்கும், வளர்க்கும். அன்பு காட்டக் குற்றங்குறைகள் தடையாக அமையா; அமைய இயலா, ஒருவர் எனக்குத் துன்பம் செய்தாலும் தாங்கிப் பொறுத்துக் கொண்டு மாற்ற வேண்டும். அதற்காக எதிர்ப்பகை காட்டுதல் நன்றன்று.

இறைவா, எனக்கு அன்பு செய்யும் உள்ளத்தினைத் தா, அன்பு செய்வதை இயல்பூக்கமாக்கு தொடர்ந்து அறிவார்ந்த நிலையில் அன்பைப் பேணி வளர்க்கவும், பாதுகாத்துக் கொள்ளவும் கற்றுக் கொடு. அன்பால் அனைத்துலகும் இணைந்து வாழ்ந்திட அருள் செய்க!