பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

223




ஜூலை 25



பலருடன் கூடிப் பூத்துக் குலுங்கும் பொலிவுடைய வாழ்க்கையை அருள் செய்க!

இறைவா, நின்னைக் கண்டும் கண்டிலேன். என்ன கண் மாயமே. நான் காண்பன, உறவு கொள்வன அனைத்தும் மெல்ல மெல்லத்தான் கரைந்தொழிகின்றன. திடீர் என்று எதுவும் நடந்து விடுவதில்லை!

நட்பு அரும்பி மெல்ல மெல்ல வளர்கிறது. அங்ஙனமில்லாது திடீர் என்று தோன்றும் நட்பு. திடீர் என்றே போய் விடுகிறது. நட்பில் பிரிவு கூட மெல்ல மெல்லத்தான் வற்றிப் பிரிந்து விடுகிறது.

ஆதலால் உறவில், நட்பில் நெருக்கத்தையும் பராமரித்துக் கொண்டு வரவேண்டும். இடைவெளி ஏற்பட்டால் ஆபத்துதான். பகையே இல்லாதிருந்தாலும், திரும்பப் போய்ச் சேர நாணம், கூச்சம் எல்லாம் வந்துவிடும்.

இறைவா, நான் பழகிய ஒவ்வொருவரிடத்தும் தலை நாள் பழக்கம் போலவே பழக விரும்புகிறேன். ஆனால் என்னால் இயலவில்லை. மன்னித்துக் கொள். நான் இனி எல்லாரிடமும் கொண்டுள்ள உறவுகளைப் பராமரித்துப் பேணுகிறேன். அடிக்கடி சந்திக்கிறேன். உறவு கலந்து உண்டு பழகி மகிழ்வூட்டுகிறேன், மகிழ்கிறேன்.

மற்றவர்கள் மனநிறைவு கொள்ளும் அளவு, அவர்களைப் பாராட்டுகிறேன். அடிக்கடி சந்திக்க வேண்டிய அவசியமில்லையானாலும் சந்திக்கிறேன். பழகியோரைக் காண்பதும், உறவுகளை வளர்த்துக் கொள்வதும்கூட வாழ்க்கையில் ஒரு நீங்காக் கடமை. இறைவா, இவ்வகையே வாழ்ந்திட அருள் செய்க!

என் இதயத்தில் வற்றாத, அன்பு ஊற்று வேண்டும். அருள் செய்க. என் இதயத்தில் நம்பிக்கை என்ற ஒளி விளக்கு அணையாமல் எரிய வேண்டும். பலருடன் கூடிப் பூத்துக் குலுங்கும் பொலிவுடைய வாழ்க்கையை எனக்கு அருள் செய்க!